சமீபத்திய செய்தி

குறைந்த வருமானம் பெறுவோருக்கான 'உங்களுக்கு வீடு அனைவருக்கும் நாளை' திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் மூன்று குடும்பங்களுக்கு வீடுகள் இன்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் கையளிக்கப்பட்டது.

இதன்படி, கங்கொடகம, உடுப்பிள்ளேகொட மற்றும் கிரிந்த மல்வத்துகொட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மூன்று குடும்பங்களுக்கான நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சருக்கும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ..

வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் ஆகியோர்க்கு இடையே பெப்ரவரி 15 ஆம் திகதி வெகுஜன ஊடக அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

போலியான தகவல்கள் பரவுவது,  இன்று உலகம் எதிர்நோக்கும் கடும் சவாலாக உள்ளதாகவும், அதைத் தடுக்க நியூசிலாந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.

பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஓஷதி அழகப்பெரும மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் கொள்கை ஆலோசகர் செல்வி சுமுது ஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுமாறு, மாணவர்கள் மற்றும் பேராசியர் குழாமினால் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனைக் கருத்திற்கொண்ட தற்போதைய அரசாங்கம், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் உயர்க் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், விரிவுரை மண்டபங்கள், பீடங்களுக்கான கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” அபிவிருத்தி செய்யப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழக விடுதி மைதானத்தில் கூடியிருந்த பிரதேசவாசிகள், நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை அன்புடன் வரவேற்றனர். அவர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் நலன் விசாரித்தறிந்தார்.

வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றும் நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கில் கல்வெட்டைத் திறைநீக்கம் செய்து திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள், பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையம் மற்றும் சகவாழ்வு மையம் போன்றவற்றை மாணவர் பாவனைக்குக் கையளித்தார்.

தகவல் தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட  

ஜனாதிபதி அவர்கள், தாம் பெற்றுக்கொள்ளும் அறிவைத் தமது பிரதேசங்களுக்கே வழங்க முடியுமானால், அதுவே தான் பிறந்த இடத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் பெரும் சேவையாகுமென்று எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திஜீவிகளைக் கல்வியினூடாகச் சமூகமயப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று, நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நாடொன்று பலமடைய வேண்டுமாயின், அந்த நாட்டின் கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும். அதுவே, பயனுள்ள முதலீடாகுமென்று எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், தேசிய கல்வியைக் கட்டியெழுப்புவதற்கே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது என்றார்.

பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதிகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைப் படிப்படையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கலைப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான பாடத்திட்டங்களைச் சமூகத் தேவைகளுக்கேற்ப தயாரிப்பதற்காகப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உலகில் அதிக கேள்வி நிலவும் துறைகளை அடையாளம் கண்டு, அத்துறைகளினூடான புத்திஜீவிகளை உருவாக்கும் காலத்தின் தேவையைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பென்றும் எடுத்துரைத்தார்.

“உங்களதும், உங்கள் நண்பர்களதும் மனங்களில் தேசிய சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு, இவ்வாறான பல்கலைக்கழகங்களின் விடுதிகளையும் வகுப்பறைகளையும், மைதானங்களையும், சிற்றுண்டிச்சாலைகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார். 

பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் பந்தங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவை என்றும் அந்தத் தொடர்பு, இந்த நாட்டினது அபிவிருத்திக்கு பெரும் ஊன்றுகோலாக இருக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான சம்பத் அமரதுங்க ஆகியோரும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

11.02.2022

மாத்தறை நகரில் உள்ள இராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெரும  அவர்களின் தலைமையில் சனிக் கிழமை (05) பிற்பகல் வெலிகமை பிரதேச செயலாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 மாத்தொட்ட இராணுவ வீர ஒன்றியம், ஹெல ஜாதிக இராணுவ வீர ஒன்றியம், மற்றும் அகில இலங்கை கலாசார ஐக்கிய மன்றம் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

 வெலிகம சாசனாரக்ஷன ஒன்றியத்தின் செயலாளர் வண.வேபத்திர இந்திரசிறி நாயக்க தேரர், மாத்தோட்ட இராணுவ வீர ஒன்றியம் மற்றும் வெலிகமை பிரதேச சபைத் தலைவர் திரு. புஷ்பகுமார பட்டகே, அகில இலங்கை கலாசார ஐக்கிய மன்றத்தின் தலைவர் கலாநிதி திரு. குசான்  ஜயமின் த சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரிவினைவாதமற்ற நாட்டை உருவாக்குவதற்கு கல்வி வழிவகுத்தாலும், சமூக அமைப்பில் அவ்வாறே நடக்காதது பிரச்சினைக்குரியது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார். வெலிகம பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போர்வீரர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரூபவாஹினி ஒளிபரப்பினை டிஜிட்டல் மயமாக்கல் செயற்றிட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கூட்டத்தில் ஊடக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெகுசன ஊடக  அமைச்சினால் அமுல்படுத்தப்படும் தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் பெப்ரவரி முதலாம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஒலிபரப்பாளர் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, தொலைக்காட்சி டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்பாடுகள் குறித்தும், இதில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப சவால்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

ஊடக அமைச்சின் செயலாளர் அனுச nபல்பிட்ட அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க மற்றும் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

சர்வஜன வாக்கெடுப்பை கையாளும் ஊடகங்களின் பலம் அரசியல் நிறுவனங்களின் பலத்தை விட மிக அதிகம் எனவும், அந்த பெரும் பலத்துடன் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பும் இருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஊடக சட்ட மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"ஊடக வரலாற்றில் நம்பகத்தன்மையும் மரியாதையும் அதிகம் இருந்து வந்துள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் இன்று அந்த நற்பெயருக்கு நம்பகத்தன்மை இருக்கிறதா?  ஊடகத்திற்கு உள்ள கௌரவம் குறைந்துள்ளது.  அவ்வாறே நம்பகத்தன்மையிலும் குறையுள்ளது என்பதை வெகுசன ஊடக அமைச்சர் என்ற வகையிலும், ஊடகத் துறையில் உள்ள நாம் அனைவரும் எவ்வித வாதங்களும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.   அது எப்படி நடந்தது? ஏன் நடந்தது?  அவ்வாறெனில் அதற்கான தீர்வுகள் என்ன? அந்த தீர்வுகளுக்கான அர்த்தமுள்ள உரையாடலை உருவாக்குவதே இந்த விவாதத்தின் அடிப்படை.

ஊடகத்துறையில் நமது நம்பகத்தன்மை ஐந்து முக்கிய விடயங்களில் கீழ் களங்கம் அடைந்துள்ளது என்று நான் நம்புகிறேன். முதலாவது, எஜமானனின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல், பொதுமக்களின் நலனுக்காக அல்ல, அரச ஊடகமெனில் அரசாங்கம் என்ற எஜமானுக்கு, இதன் மூலம் சமநிலை இழந்துள்ளது. இது எனது நம்பிக்கையின் அடிப்படையில் முதல் விடயமாகும்.  இரண்டாவது விடயம்  தீவிர அரசியல் மயமாக்கல், அதை நாம் அனுபவிக்கிறோம். சில சமயங்களில் இது வெளிப்படையாக மட்டுமல்ல, மறைமுகமாகவும் நடக்கின்றது. அவ்வாறே, அடுத்த தீவிரமான பிரச்சினை என்னவென்றால், தனியுரிமையின் எல்லைகள் மிகத் தீவிரமான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.. பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் உள்ளனர்.

அடுத்த விடயம் என்னவெனில்,  தகவலின் அடிப்படையில் அல்லாமல்,  மனோபாவத்தின் அடிப்படையில் போலிச் செய்திகளால் மக்கள் ஏமாறுகிறார்கள்.  அவ்வாறே  நாம் அடிக்கடி பார்ப்பதும் அனுபவிப்பதுமான ஒரு விடயம்தான் தேசியம் மற்றும் மதத்தின் அடிப்படையிலான வெறுப்பான கருத்துக்கள்.  நான் கண்டறிந்த விடயங்களுள் இது இன்னொரு விடயமாகும். இதனால் தான் நாம் வரலாற்றில் பெற்றுக் கொண்ட கண்ணியம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதிலிருந்து எப்படி விடுபடுவது?  தணிக்கை தான் இதற்கு சரியான தீர்வு என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.    இவ்வாறான கருத்தாடல்கள் இருக்காலம், ஆனால் நாம் பதற்றமடையத் தேவையில்லை.  நான் வெகுசன ஊடக அமைச்சர் என்ற வகையில் இது சரியான தீர்வு அல்ல என நான் கருதுகின்றேன்.  நான் அதை நிராகரிக்கிறேன்.  ஆனால் எமக்கு ஒருவித ஒழுங்குமுறை தேவைப்படுகின்றது.  .அதை யாரும் நிராகரிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

இக் கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் ரஞ்சன ஹேரத், முன்னாள் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, ஜனாதிபதி சட்டத்தரணி ஜகத் விக்கிரமநாயக்க, கலாநிதி ரங்க கலன்சூரிய, ஊடகவியலாளர் மற்றும் ஆய்வாளர் நாலக குணவர்தன, இலத்திரனியல் ஒலிபரப்பாளர் சங்கத்தின் தலைவர் அசங்க ஜயசுந்தர, ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் முன்னணி சமூக ஊடக ஆர்வலர்கள் சிலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கையின் வெளிநாட்டுத்; தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதுவர்களுக்கும் இடையில் சுமூகமாக கலந்துரையாடப்பட்டது.

நவீன தொழிநுட்பத்துடன் கூடிய வினைத்திறனுள்ள மேம்பட்ட தபால் சேவையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பில் தற்போதுள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் 25ஆம் திகதி நடைபெற்றது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சமகி ஜன பலவேக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் சேவைக் கட்சி  போன்ற அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல சுயாதீன தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

இங்கு பிரதானமாக பல விடயங்கள் பற்றி அவதானம் செலுத்தப்பட்டதுடன், தபால் மா அதிபர் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியதன் பின்னர் உரிய ஆட்சேர்ப்புகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.

 

தனியார் தபால் சேவையின் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்கின்ற போது பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை குறைப்பதற்காக ஒழுங்குபடுத்தும் நிறுவனமொன்றினை ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், தேவையான பத்திரங்களை தயாரித்து அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 

தபால் திணைக்களத்தின் வருவாயை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரதேச தபால் பிரிவிற்கும் ஒருவர் என்ற அடிப்படையில்,  புதிதாக  சேர்த்துக் கொள்ளப்பட்ட இணைத்துக் கொள்வதற்கும், அவர்களுக்கு சந்தைப்படுத்தல் பயிற்சியளித்து அதன் மூலம் தபால் சேவையின் வருவாயை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தபால் மா அதிபர் அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

 

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ருவன் சத்குமார, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நெருக்கடியான காலங்களில் நாட்டிற்காக கொள்கை வகுப்பாளர்கள் மிகப்பெரிய தியாகங்களைச் செய்ய வேண்டும் என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மின்வெட்டு தொடர்பில் நேற்று வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் பேச்சுவார்த்தை மேசையில் எடுத்த தீர்மானங்கள் மற்றும் அமைச்சரவையில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மின்வெட்டு மேலும் ஏற்படக்கூடாது என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும,

“மேற்படி விடயத்தில் நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பீக் ஹவர்ஸில் 25 வாட் மின்விளக்கை அணைத்து வைக்க முடியுமானால், அந்த ஐந்து மணி நேரத்தில் 140 மெகாவாட் சேமிக்க முடியும்.

அதாவது, பீக் ஹவர்ஸில் ஐந்து மணி நேரம் 25 வாட் மின்விளக்கை அணைத்து வைப்பது என்பது நாம் பெரிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியது போல் ஆகும். ஆனால் அது மட்டும் செய்தால் போதாது. அந்த தியாகத்தை குடிமக்கள் மட்டும் செய்தால் போதாது. கொள்கை வகுப்பாளர்களாகிய நாம் இந்த தருணத்தில் மிகப்பெரிய தியாகத்தை செய்ய வேண்டியவர்கள். கொள்கை வகுப்பாளர்களாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அந்த அர்ப்பணிப்பை செய்து காட்ட வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். சில அரச அலுவலகங்களில் குளிரூட்டி இயந்திரங்களை  18 முதல் 19 டிகிரி செல்சியஸ் வரை குறைத்துள்ளனர்.  பொதுவாக குளிரூட்டியின் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் இருந்தால் போதுமானது என மின்சக்தி வல்லுனர்கள்  கூறுகின்றனர். ஏனென்றால் நாம் ஐஸ்லாந்தில் வசிக்கவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

 

இந்த நாட்டில் உள்ள கல்வி முறையும் பரீட்சை முறையும் நாட்டின் குழந்தைகளின் திறமைகளை அடையாளம் காணும் அளவுக்கு ஆக்கப்பூர்வமானதாக இல்லை என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். குழந்தைகளை தேர்ச்சி பெற்றவர், தேர்ச்சி பெறாதவர் என பிரிக்கும் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கை மன்ற நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சிறுவர்களின் திறன்களை மதிப்பீடு செய்து விருதுகள் வழங்கும் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"எனது கதையில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன. முதல் அத்தியாயம் பெற்றோர்களுக்கு விடப்படுகின்ற கோரிக்கை, இரண்டாவது அத்தியாயம் தியவன்னா மத்தியில் இருந்து கொள்கைளை வகுப்பவர்களிடம் விடப்படுகின்ற கோரிக்கை, மூன்றாவது அத்தியாயம் எனது சகாக்கள் மற்றும் ஊடக  நிறுவனங்களிடம் விடப்படுகின்ற கோரிக்கை,

பிள்ளைகளை தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள்  என பிரிக்கும் கல்வி முறைக்கும் பரீட்சை முறைக்கும் பதிலாக பிள்ளைகளின் திறமைகளை மேம்படுத்தும் கல்வி முறையும் பரீட்சை முறையும் வகுக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளை தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் என பிரிக்கும் ஆபத்தான முறையொன்று உலகில் உள்ளது.  ஒவ்வொரு குழந்தையும் தேர்ச்சி பெற்றவர்களே.  ஆனால் குழந்தை எத்துறையில் திறமையானவர் என்பதைக் கண்டறிய நமது தேர்வு முறையும் கல்வி முறையும் ஆக்கப்பூர்வமாக இல்லை. கணிதத்தில் தோல்வியடைந்தால் வாழ்க்கையிலே தோல்வியடைந்தவராகிறான்.  இவ்வாறுதான் எமது கல்வி முறை கட்டியெழுப்பப் பட்டுள்ளது.  சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 50 சதவீதம் கணிதத் தேர்வில் சித்தி பெறுவதில்லை. அப்படியென்றால் அந்த 50 சதவீதமும், வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களா?  கணிதத்தில் தேர்ச்சி பெறாதவன் அழகியற் துறையில் திறமையானவனாக இருப்பான்.  சித்திரம் வரைவதில் திறமையானவனாக இருப்பான்.  தொழில்நுட்பத்தில் திறமையானவனாக இருப்பான்.  ஆனால் எமது கல்வி முறை, எமது பரீட்சை முறை அதனைக் கண்டறிந்து கொள்வதற்கு திறன் வாய்ந்தாக இல்லை.  எனவே, குழந்தைகளை தேர்ச்சி பெற்றவன், தேர்ச்சி பெறாதவன் எனப் பிரிக்கும் இந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டும்.

உலகின் பல நாடுகளும் பின்பற்றும், பின்லாந்து மட்டுமின்றி எஸ்டோனியா போன்ற நாடுகள்  ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்புகளிலே நினைவாற்றலுடன் தேர்வு எழுதத் தொடங்குகிறார்கள் என அமைச்சர் கூறினார்.

"எனது இரண்டாவது அத்தியாயம் நானும் உட்பட கொள்கை வகுப்பாளர்களிடம் விடுக்கப்படும் வேண்டுகோள்,  மேற்குலக சமூகம் 13 என்கின்ற இலக்கம் துரதிர்ஷ்டமானது என்று நம்புகின்றது.  இதற்கு விஞ்ஞான ரீதியான கருத்துக்கள் இல்லாதிருக்கலாம்.  அவ்வாறே 225 என்கின்ற இலக்கம் கூட துரதிர்ஷ்டமானது என இலங்கை மக்கள் சமூகமும் கருதுகின்றனர்.  இந்த வாதத்தினை கல்வியினால் மாத்திரமே மாற்ற முடியும். உலகில் வறுமை, தீவிரவாதம், பயங்கரவாதம் அனைத்தும் கல்வியின்மையால் எழுகின்றன. 

எனவே கட்சிகள், எதிர்க்கட்சிகள் என குழுக்களாகப் பிரிக்காமல், 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற கல்வி முறைக்கான நமது கருத்துகளை முன் வைக்க வேண்டும்.  இதற்காக இலங்கை தேசத்தவர்கள் என்ற வகையில் நாம் நமது சகோதர மொழிகளைக் கற்க வேண்டும். அவ்வாறே,  சர்வதேச மொழியாக குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும்.

தனது உரையின் மூன்றாம் அத்தியாயத்திற்கு விளக்கமளித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள்,  குழந்தைகள், ஊனமுற்ற குடிமக்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் அறிக்கைப் படுத்தும் போது ஊடகவியலாளர்கள் போன்றே ஊடக நிறுவனங்களும் உணர்வுபூர்வமாக செய்திகளை வெளியிட வேண்டும் என்றார்.

"குழந்தைகள் நீரைப் போன்றவர்கள்.  நீரின் வடிவம் என்ன?  நீர் ஊற்றும் பாத்திரத்தின் வடிவமே நீரின் வடிவமாகும்.  எனவே சிறுவர் துஷ்பிரயோகம் என்பது குடும்ப வன்முறையில் மட்டும் நின்றுவிடவில்லை. செய்தித்தாள் பக்கங்களுக்குள், கேமரா லென்ஸினுள் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படலாம். எனவே, ஊடகத்துறை அமைச்சராக அல்லாமல், ஒரு தொழில்முறை சக ஊழியராக, அறிக்கையிடுவதில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த காலத்தை குறை கூறுவதை விடுத்து, எதிர்காலத்தை நோக்கி விரல் நீட்டும் மக்கள் பிரதிநிதிகளாக ஒன்றிணைய வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 “கொள்கை அறிக்கை மீதான இன்றைய விவாதத்திற்கு மேலதிகமாக, கௌரவ சபாநாயகர் அவர்களே, நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற  பாராளுமன்றத்தின் தரம் தொடர்பாக, அதன் நடத்தை தொடர்பாக அறிக்கைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பதற்கு இவ்வுரையில் ஒரு நிமிடத்தை நான் ஒதுக்க விரும்புகின்றேன்.  எமது அறிவு, எமது ஆய்வு தொடர்பாக பொதுமக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர் ஊடகங்களில் கூறிய கருத்து, அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த கொள்கைப் பிரகடன வெளியீட்டிற்கு மாத்திரம் இரண்டாவதாக பாரியதொரு இடம் கிடைத்துள்ளது.  இது தொடர்பாக அவதனாத்தைச் செலுத்த விரும்புகின்றேன்.

இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தியதற்காக கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கௌரவ சபாநாயகர் அவர்களே, இது ஒரு அரசாங்கம், ஒரு கட்சி, ஒரு தலைவர், ஒரு குழுவின் தவறு அல்ல. 1948ல் இருந்து நாம் செய்த பல மோசமான செயல்களின் இறுதி விளைவாக இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கௌரவ எதிர்க்கட்சி உறுப்பினர்களே, 13ம் எண் துரதிர்ஷ்டவசமானது என்ற அங்கீகாரம் உலகில் உள்ளது என்பதை நாம் மனதார ஒப்புக்கொள்ள வேண்டும். இது உண்மையாக இருக்காது, ஆனால் ஒரு பிரபலமான கருத்து உள்ளது. மேலும், 225 என்ற எண் குறித்து நம் நாட்டில் அவநம்பிக்கையான கருத்தும் உள்ளது. ஒரு தரப்பினர் மீது விரல் நீட்டாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே எனது பரிந்துரை. எனவே இந்த சந்தர்ப்பத்தை நாம் கூட்டாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தனது உரையில் கோரிக்கை விடுத்தார். அரசியலமைப்பின் மூலம் மேலாதிக்கத்தை கூட்டாகக் கூறும் இந்த பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளாகிய நாம் அந்த மேலாதிக்கத்தை யதார்த்தமாக்குகிறோமா?

மாண்புமிகு தலைவர் அவர்களே, அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் கடந்த இரண்டு வருடங்களை ஆராயும் போது, அவரது கொள்கைப் பிரகடனமான "சௌபாக்கியத்தின் நோக்கு" ஒப்பிடுவது மிகவும் நியாயமானது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் ஜனாதிபதி வேட்பாளராக அவர் முன்வைத்த கொள்கை அறிக்கையை வைத்தே கொள்கை அறிக்கை உரையை மதிப்பிட வேண்டும். எனவே,  நாம் இந்த இரண்டு வருட நெருக்கடியை எதிர்கொண்டு பயணித்த இந்தப் பயணத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி பாராட்ட வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

நாங்கள் அனைவரும் தடுப்பூசி பற்றி பேசினோம். இன்று நாம் இந்த தடுப்பூசியின் அடிப்படையில் உலகின் மற்ற நாடுகளை விட ஒரு படி மேலே இருக்கிறோம், நம்மைப் போன்ற பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பைக் கொண்ட நாடுகளுடன் மட்டுமல்லாமல், நம்மை விட உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆரோக்கியமான ஓர் இனமாக முன்னோக்கிச் சென்றுள்ளோம். அதற்காக பெரும் தியாகம் செய்த ஓர் அணி உள்ளது. அந்த பெரிய குழுவிற்குள் முன்னுரிமையை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்குவதில் எம்மிடையே எவ்வித வாதங்களும் இல்லை.  நான்கு நாட்களுக்கு முன், உலக சுற்றுலா கவுன்சில், ஆசிய பிராந்தியத்தில் சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடு இலங்கை என்று அறிவித்தது. இது வேறு எதனாலும் அல்ல, இந்த தடுப்பூசியில் நாம் அடைந்துள்ள சிறப்பின் காரணமாகவே எமக்கு அந்தச் சான்று கிடைக்கின்றது. எவ்வாறாயினும்,  தற்போது நாம் நெருக்கடியை எதிர்நோக்குகிறோம் என்பது மறைக்கக் கூடியதொன்றல்ல.

என்ன நெருக்கடி? இன்று உற்பத்தியை விட நுகர்வு முக்கியமானது எனக் கருதிய  ஒரு சமூகமாக நாம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். அந்த நெருக்கடியின் வெளிப்பாடாகவே கோவிட் தொற்றுநோய் மாறியுள்ளது.

இவ்வாறான ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், அண்மைக் காலத்தில் அரசாங்கம் என்ற வகையில் நாம் எடுத்த சில சாதகமான நடவடிக்கைகள் குறித்து உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். குறிப்பாக நமது கல்வி முறையில் நமது நாட்டின் குழந்தைப் பருவ வளர்ச்சி பற்றி. உலகின் எந்த நாட்டிலும் கல்வித் துறையில் ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சி ஒரு மையப் புள்ளியாக மாறி வருகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக ஆகக் குறைந்தது முழு நாட்டிற்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடநெறி, பாடத்திட்டம் மாகாண சபையிலிருந்து மாகாணசபை வரை வேறாக்கப்பட்ட வேலைத்திட்டம் எதுவும் எமது நாட்டில் இல்லை. அதை முறைப்படுத்த எடுத்த முடிவை நாம் பாராட்ட வேண்டும்.

மேலும் இந்த கொள்கை விளக்க விவாதத்தின் போது, ஜனாதிபதி அவர்கள் பாடங்கள் குறித்து பேசினார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காதது வரலாற்று ரீதியாக நாம் செய்த ஒரு தவறு. எனவே பல்கலைக்கழக அமைப்பு முறையில் நாம் கோட்டை புகையிரத நிலையம், லிப்டன் சுற்றுவட்டத்திற்குப் பொருந்தக் கூடிய பட்டதாரிகளை உருவாக்கினோம்.

இது நெருக்கடியின் ஆரம்பம். புதிய பல்கலைக்கழக அமைப்பில், என்.எஸ்.பி.எம். மையும் நான் முன்னின்று நடத்தினேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் சைடம்; பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதன் வேலைவாய்ப்பு விகிதம் 96 சதவீதம். தளத்தின் 94 சதவீதம். அரச பல்கலைக்கழக அமைப்பு தோல்வியடைவதற்கு அதுவும் ஒரு காரணம். எனவே, கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களில் ஒன்று, ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலத்தை உள்ளடக்குவது. குறிப்பாக கலைப் பாடநெறிகளுக்குள் அத்தகைய வசதி இல்லை. இதற்காக பெருந்தொகையை ஒதுக்குவதும், பல்கலைக்கழக அமைப்பிலும், ஒவ்வொரு பட்டப் படிப்பிலும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலமும் சேர்க்கப்படுவது முக்கியம். பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு 13வது திருத்தச் சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என நண்பர் எம்.பி.சித்தார்த்தன் தெரிவித்த கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. உதாரணமாக வட மாகாணத்தில் 22 தேசிய பாடசாலைகளே இருந்தன. வடமாகாணத்தில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தேசிய பாடசாலை ஒன்று கூட இருக்கவில்லை. எனவே நான் கல்வி அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்தேன். குறைந்தபட்சம் ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு தேசிய பாடசாலை இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன். ஏனெனில் வடக்கில் கல்வியில் பாரிய பிரச்சினை உள்ளது. வடமாகாணத்தில் உள்ள ஆரம்பக் கல்வி ஆசிரியர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் பயிற்சி பெறாத ஆசிரியர்களாக உள்ளனர். எனவே எதிர்காலத்தில் ஒரு நாள் நாம் ஏன் ஆயுதம் ஏந்துவதில்லை என்று குழந்தைகளிடம் கேட்போம். நாட்டின் உள்ளது 25 சதவீதம். வடக்கில் இது 53 சதவீதமாக உள்ளது. எனவே, 13வது திருத்தச் சட்டத்தை மீறிய செயலாக இதனைக் கருத வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக டிஜிட்டல் மயமாக்கல் பற்றி பேசினோம். இப்போது, வெகுஜன ஊடக அமைச்சு என்ற வகையில், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழு தீவையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். அனலாக் தொழில்நுட்பம் நம் நாட்டிற்கு வந்து 42 வருடங்கள் ஆகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் 2000 ஆம் ஆண்டு உலகிற்கு வந்தது. தாமரை கோபுரத்தை அடிப்படையாகக் கொண்ட 16 துணை கோபுரங்களுடன் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை இதனை நிறைவு செய்யும். 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி பார்வையாளர்களும் தங்கள் திரைகளில் மிகத் தெளிவான காட்சிகளைப் பார்க்கக் கூடியதாகவும் மற்றும் மலிவு விலையில் தொலைக்காட்சிகளை  நிறுவனங்களும்  மற்றும் தொடர்பாளர்களும் பெறுவார்கள் என்றுவாறு  நாங்கள் முடிவு செய்கிறோம்

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…