சமீபத்திய செய்தி

யாழ்ப்பாணம் – மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார  மத்திய நிலையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். விவசாயிகள் தமது அறுவடைகளுக்குத் தகுந்த விலையை பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோர் மலிவு விலையில் மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

தரமான சிறந்த தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கப்படுவதன் முக்கியத்துவம் மற்றும் ரசிகர்களுக்கு உயர்ந்த தரமான ரசனையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை வெகுசனஊடக அமைச்சின் கேட்போர்கூடத்தில் கடந்த 16 ஆம் திகதி ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர்கள் பேரவைக்குமிடையில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின்போது தொலைக்காட்சி நாடகங்கள் தொடர்பில்  தேசிய கொள்கையை உருவாக்குதல், வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும்  வர்த்தக விளம்பரங்களுக்காக வரி அறவீடு செய்தல், 2023 -2032 காலப்பகுதியை சிறந்த தொலைக்காட்சி தசாப்தமாக உருவாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல், தொலைக்காட்சி நாடகத்துறையின் தொழில் தன்மையை பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

தேசிய தனித்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கி படைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பான விடயங்களை ஊடகத்துறை அமைச்சர் இதன்போது முன்வைத்தார்.

இலங்கையின் தொலைக்காட்சித் துறை நவீன தொழில்நுட்பத்துடன் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட, தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர்கள் பேரவையின் தலைவர் சட்டத்தரணி டக்ளஸ் சிறிவர்தன, அதன் செயலாளர் நாலன் மெண்டிஸ், சுரேஸ் அபேசேகர, பேராசிரியர் செனேஷ் திசாநாயக்க, நிரோஸன் இளேபெரும, சந்தன லியனகுணவர்தன, பந்துல வீரக் கொடி, ரவீந்திர குருகே, ஆனந்த அபேநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சாதக, பாதகங்களை ஆராய்ந்து சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட முடிவு

அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன்,
ஏனைய மதத் தலைவர்களே,
தாய்மார்களே, தந்தையர்களே,
சகோதர சகோதரிகளே,
அன்பான குழந்தைகளே மற்றும் நண்பர்களே

இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.

உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் ஒரு சில சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண இன்று நான் கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளேன். அதற்கு உதவ தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்தேன். இதன் மூலம், நான் எடுக்கும் முடிவுகள் செயற்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுப்பேன். எனவே, மக்களுக்காக நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்குமாறு நான் உங்களை முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

நான் மக்களின் சிரமங்களை நன்கு அறிந்த ஒருவன். நாங்கள் எதிர்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்துகொண்டு அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது.

இன்றைய இக்கட்டான நிலைமை, நம் நாடு மட்டும் முகங்கொடுக்கும் ஒரு விடயமல்ல. முழு உலகமும் ஏதோ ஒரு வகையில் ஒரு சிக்கலான சூழ்நிலையின் காரணமாக   பாதிக்கப்பட்டுள்ளன. கொவிட் நோய்த் தொற்றினால் அதிகரித்த கப்பல் கட்டணங்கள், பொருட்களின் விலை அதிகரித்தல் மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகிய அனைத்தும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆனாலும் நாம் மக்களின் பக்கம் நின்று  நிவாரண நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்.

இந்த நெருக்கடி ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல. அன்று இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியை விரைவில் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நான் முயற்சிக்கிறேன்.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு நாட்டின் அரசியல்வாதிகளினதும் புத்திஜீவிகளினதும் பொறுப்பு ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பதேயாகும்.

இன்றைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம் நமது அந்நிய செலாவணி நெருக்கடி ஆகும்.

ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த நிலைமையின் பிரகாரம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்கள் ஆகும். கடந்த இரண்டு மாத கால தரவுகளின்படி, இந்த ஆண்டு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவை நாம் ஏற்க வேண்டியுள்ளது. அதன்படி, 10 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை உருவாகும்.

அண்மைக்கால தரவுகளின்படி, இந்த ஆண்டு சுற்றுலாத்துறையிலிருந்தும் அதேபோன்று தகவல் தொழிநுட்பம் போன்ற சேவை ஏற்றுமதியில் இருந்தும் சுமார் 03 பில்லியன் டொலர்கள் கிடைக்கக்கூடியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம்  02 பில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன்படி, வர்த்தகப் பற்றாக்குறை 05 பில்லியன் டொலர்களாக இருக்கும்.

இதற்கிடையில், இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அப்போது 11.9 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும்.

ஏனைய கடன் உதவிகள் மற்றும் முதலீடுகளாக 2.5 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் அந்நியச் செலாவணியில் மொத்தம் 9.4 பில்லியன் டொலர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

ஆனால் ரூபாய் நெகிழ்வின் பின்னர் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறக்குமதி செலவை 22 பில்லியன் டொலரில் இருந்து 20 பில்லியன் டொலர்கள் வரை குறைத்துக் கொள்ளவும் முடியும். அப்படியானால், வர்த்தக பற்றாக்குறையை 07 பில்லியன் டொலர்கள் வரை குறைக்க முடியும். அதைத்தான் நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று, சேவை ஏற்றுமதியின் மூலம் 04 பில்லியன் டொலர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 05 பில்லியன் டொலர்களையும் எதிர்பார்க்கலாம். அதன்படி, நமது வர்த்தக பற்றாக்குறை 2.4 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், நமது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நாம் செயற்பட வேண்டும்.

இதற்காக, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் எங்களது கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். இதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய பொறிமுறையின் மூலம்  செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய கலந்துரையாடலும் இந்த நோக்கத்துடனேயே இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடல் மூலம் நாம் எதிர்பார்ப்பது, ஒரு வருடத்துக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான எனது கலந்துரையாடலுக்குப் பிறகு, சாதக, பாதகங்களை ஆராய்ந்து அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நான் முடிவு செய்தேன்.

கடந்த காலத்தில் நான் எடுத்த சில முடிவுகளால் இறக்குமதிச் செலவை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது. இந்த பிரச்சினையை முன்கூட்டியே கண்டுகொண்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். மேலும், உள்நாட்டில் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கைத்தொழில்களை ஊக்குவித்தோம். அதேபோன்று, பல அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த பயிர்களை நம் நாட்டில் பயிரிடுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அவற்றின் வெற்றிகரமான முடிவுகளை இப்போது காண்கிறோம்.

இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சினை, உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரிப்பதாகும். சராசரியாக, நமது இறக்குமதிச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் உலக சந்தையில் எரிபொருளின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால்தான் நம் நாட்டிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. நம் நாட்டில் வாகனங்களுக்கு மட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதனால்தான், முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த நான் தொடர்ந்தும் கலந்துரையாடி குறித்த நிறுவனங்களை ஊக்கப்படுத்தினேன்.

எனவே எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை நீங்கள் புரிந்துகொண்டு செயற்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலா கைத்தொழில் மீண்டும் எழுச்சிபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

அதேபோன்று, தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் துரிதப்படுத்துவதால், இத்துறைகள் மூலம் நாட்டுக்கு வரும் வருமானம் அதிகரித்து வருகிறது.

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் ஆகும். அந்நிய படையெடுப்பு, பெரும் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளோம். கடந்த கொரோனா நோய்த் தொற்றை நாம் எதிர்கொண்ட விதம் சர்வதேச அமைப்புகளால் கூட பாராட்டப்பட்டது. தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் என்னிடம் பாதுகாப்பு, ஒழுக்கம், நவீனமயமான அபிவிருத்தி அடைந்த நாடு, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ஆகியவற்றையே கேட்டீர்கள். எனது பதவிக்காலத்தில் ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆரோக்கியமான தாய் நாட்டில் எனது எதிர்கால பதவிக்காலத்தை அந்த அடிப்படை இலக்குகளுக்காக அர்ப்பணிப்பேன்.

அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அரச ஊழியர்களிடமும் நான் கேட்டுக்கொள்வது, எமது பிள்ளைகளுக்கு சிறந்த நாட்டை வழங்குவதற்காக, எம்மிடம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்ள நாம் ஒரு குழுவாக இலட்சியத்துடனும் தியாகத்துடனும் செயற்படுவதையே ஆகும்.

உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன்

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்! 

எசிதிசி ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தின் கீழ் முதலாவது திடீர் மரணத்துக்கான காப்புறுதியை வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்த 16 ஆம் திகதி கையளித்தார்.

கோவிட் தொற்றுக்குள்ளாகி கடந்தவாரம் உயிரிழந்த பிராந்திய ஊடகவியலாளர் சுனில் பத்தேவித்தானவின் பெயரில் வழங்கப்பட்ட ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெருமதியான காப்புறுதியை அவரது மனைவி சமரவீர முதலிகே தோனா சோமாவத்தியிடம் அமைச்சர் கையளித்தார்.

களுத்துறை தொடங்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட பத்தேவித்தான(63) லங்காதீப்ப பத்திரிகையில் 30 வருடங்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் 10 வருடங்களும் பிராந்தியச் செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.

 இந்நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவும் கலந்து கொண்டார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று, (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங் ரீ (Changyong Rhee),  பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஏன்-மெரீ கல்டே-வூல்ஃப் (Anne-Marie Gulde-Wolf) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் பெரிடானுஸெட்யாவான் (Tubagus Feridhanusetyawan) ஆகியோர் இதில் அடங்குவர்.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

கிரிந்த-புகுல்வெல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் மார்ச் 04ஆம் திகதி கிரிந்த-புகுல்வெல்ல பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கூடியது.

பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் தமது பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளை கலந்துரையாடக்கூடிய கௌரவமான இடம் எனவும், உள்ளூர் மற்றும் கிராமிய மட்டங்களில் வெளிவரும் முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் குழு அதிக கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய பரிசோதனை உத்தியோகத்தர்கள், குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோரின் கூட்டு அர்ப்பணிப்பே கிராம அபிவிருத்திக்கான பங்களிப்பின் அடிப்படையாக அமைவதாகவும் அவர்களின் முறையான சேவை மிகவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிரிந்த புழுல்வெல்ல பிரதேச சபையின் தலைவர் சனத் ஹெட்டியாராச்சி, கிரிந்த புழுல்வெல்ல பிரதேச செயலாளர் ஏ.பி.டபிள்யூ.டி. திருமதி ராஜபக்சே மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டொபின்க் ஆகியோருக்கிடையிலான இருதரப்புச் சந்திப்பு கடந்த மார்ச் 02ஆம் திகதி ஊடக அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின் ஆரம்பத்தில், இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மக்களுக்கும் அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபங்களை இந்தோனேசிய தூதுவரிடம் தெரிவித்துக்கொண்டார். மேலும் பாளி நகரில் நடைபெறவுள்ள பாராளுமன்ற சங்கங்களுக்கிடையிலான 144வது மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக தான் கலந்துகொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். இலங்கையில் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் முதலாவது வெகுசன ஊடகப் பயிற்சி நிலையத்துக்கு இந்தோனேசிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் இதன் போது இருதரப்பினரும் கலந்துரையாடினர். இலங்கை-இந்திய நாடுகளுக்கு இடையிலான  70 வருட இராஜதந்திர உறவை கொண்டாடும் வகையில் இலங்கை யில் முத்திரையொன்றை வெளியிட்டு வைக்குமாறு இந்தோனேசிய தூதுவர் முன்வைத்த கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அமைச்சர் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உறுதிபூண்டார். இச்சந்திப்பில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ஓஷதி அழகப்பெரும மற்றும் இந்தோனேசிய தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் ஹெரு பிரயிட்னோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதில் அரசியல்வாதிகளை விட ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் பெரும் பங்காற்ற முடியும் எனவும், இது வரலாற்று ரீதியாக  நிரூபணமாகியுள்ளது என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 18 ஆம் திகதி யாழ்.மாவட்ட அரசாங்க வெளியீட்டுப் பணியகத்தை திறந்து வைத்ததன் பின்னர் யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர், பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தேசிய ஒருமைப்பாடு நாட்டின் மிக முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும் என்றார்.

ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் உரையாற்றுகையில்...

“தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு அரசியலை விட ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் முக்கிய பங்காற்ற முடியும்.  இது வரலாற்று ரீதியாக நிருபணமாகியுள்ளது.  ஜனநாயகத்தின் எல்லைக்குள் விமர்சனங்கள் இருக்கலாம், ஆர்ப்பாட்டாங்கள் இருக்கலாம், வாதப் பிரதிவாதங்கள் இருக்கலாம், இவற்றை ஜனநாயகத்தின் பண்புகளாக குறிப்பிடலாம்.  அது ஒரு போதும் உங்களுக்கு இடையேயான நட்பு தடையாக இருக்கக் கூடாது.  ஒரு நாடு முன்னேறுவதற்கு மோதல் அவசியம் இ ஆனால் மோதல் இறுதியில் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்.

சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட ஊடகவியலாளர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர் எவ்வாறு சிந்திக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக எதிர்காலத்தில் ஊடக பரிமாற்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். மேலும், யாழ்ப்பாணம் மிகவும் மேம்பட்ட ஊடகப் பாவனையைக் கொண்ட ஒரு இடம். ஏன் தெரியுமா? இந்தப் பகுதியில் ஐந்து பிராந்திய அச்சு ஊடகங்கள் உள்ளன. இலங்கையில் வேறு எங்கும் இப்படி ஒரு இடம் இல்லை.  அவ்வாறே, பேச்சு சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும். ஊடகங்களை கடுமையான விதிகளால் கட்டுப்படுத்த முடியும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. அதற்கு சுய கட்டுப்பாடு தேவை. அது நமக்குள் இருக்க வேண்டும். "

ஊடகவியலாளர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அசிதிசி காப்புறுதி,  இலங்கையில் முதலாவது பட்டய ஊடகவியலாளர் நிறுவகத்தை ஸ்தாபித்தல் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வுகள் தொடர்பிலும் அமைச்சர் விளக்கமளித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேஸ் ராகவன், வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம் . சமன் பந்துலசேனஇ அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் மகேசன் உட்பட அரச அதிகாரிகள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கல்வியின் எதிர்காலம் இணையத்தில் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும், நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இணைய வசதிகள் மற்றும் தேவையான கருவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள டெல்ஃப்ட் சைவப்பிரகாசா கல்லூரிக்கு அத்தியாவசியமான மடிக்கணினி மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

16 ஆசிரியர்களைக் கொண்ட இப்பாடசாலையில் 68 மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன் அவர்களின் எதிர்காலப் படிப்பிற்காக கணினி மற்றும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்இ நாட்டில் நிலவும் கல்வி ஏற்றத்தாழ்வை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

"இலங்கையில் 25% ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள்  பயிற்சி பெறாதவர்களே.  வட மாகாணத்தில் மாத்திரம் 53% பயிற்சி பெறாத ஆரம்பத் பிரிவு ஆசிரியர்கள் உள்ளனர்.  இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ள இதற்கு மேல் உதாரணம் தேவையில்லை. நான் கல்வி அமைச்சராக இருந்த போது வடமாகாண கல்வித்துறையை ஆராய்ந்தேன். வடமாகாணத்தில் 22  தேசிய பாடசாலைகள் உள்ளதாக அப்போதுதான் தெரிய வந்தது.  ஜனாதிபதியின் ஆயிரம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றும் நிகழ்ச்சியில் வட மாகாணத்திற்கு தேசிய பாடசாலைகளாக 76 பாடசாலைகள் உயர்ந்துள்ளது.  இலங்கையில் 10142 பாடசாலைகள் உள்ளன.  ஒவ்வொரு பாடசாலைக்கும் இணையம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். எதிர்காலத்தில்,  பிள்ளைகளின் கல்வி இணையத்தில் தங்கியிருக்கும்இ எனவே தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வது அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பாகும்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற பிரதித் தலைவர், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட செயலாளர் மகேசன்இ மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். பிரதீபன், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, சைவப்பிரகாச கல்லூரியின் அதிபர் அகிலன் தேஷ்வரி மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கான 'உங்களுக்கு வீடு அனைவருக்கும் நாளை' திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் மூன்று குடும்பங்களுக்கு வீடுகள் இன்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் கையளிக்கப்பட்டது.

இதன்படி, கங்கொடகம, உடுப்பிள்ளேகொட மற்றும் கிரிந்த மல்வத்துகொட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மூன்று குடும்பங்களுக்கான நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சருக்கும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ..

வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் ஆகியோர்க்கு இடையே பெப்ரவரி 15 ஆம் திகதி வெகுஜன ஊடக அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

போலியான தகவல்கள் பரவுவது,  இன்று உலகம் எதிர்நோக்கும் கடும் சவாலாக உள்ளதாகவும், அதைத் தடுக்க நியூசிலாந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.

பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஓஷதி அழகப்பெரும மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் கொள்கை ஆலோசகர் செல்வி சுமுது ஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுமாறு, மாணவர்கள் மற்றும் பேராசியர் குழாமினால் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனைக் கருத்திற்கொண்ட தற்போதைய அரசாங்கம், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் உயர்க் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், விரிவுரை மண்டபங்கள், பீடங்களுக்கான கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” அபிவிருத்தி செய்யப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழக விடுதி மைதானத்தில் கூடியிருந்த பிரதேசவாசிகள், நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை அன்புடன் வரவேற்றனர். அவர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் நலன் விசாரித்தறிந்தார்.

வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றும் நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கில் கல்வெட்டைத் திறைநீக்கம் செய்து திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள், பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையம் மற்றும் சகவாழ்வு மையம் போன்றவற்றை மாணவர் பாவனைக்குக் கையளித்தார்.

தகவல் தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட  

ஜனாதிபதி அவர்கள், தாம் பெற்றுக்கொள்ளும் அறிவைத் தமது பிரதேசங்களுக்கே வழங்க முடியுமானால், அதுவே தான் பிறந்த இடத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் பெரும் சேவையாகுமென்று எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திஜீவிகளைக் கல்வியினூடாகச் சமூகமயப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று, நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நாடொன்று பலமடைய வேண்டுமாயின், அந்த நாட்டின் கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும். அதுவே, பயனுள்ள முதலீடாகுமென்று எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், தேசிய கல்வியைக் கட்டியெழுப்புவதற்கே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது என்றார்.

பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதிகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைப் படிப்படையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கலைப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான பாடத்திட்டங்களைச் சமூகத் தேவைகளுக்கேற்ப தயாரிப்பதற்காகப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உலகில் அதிக கேள்வி நிலவும் துறைகளை அடையாளம் கண்டு, அத்துறைகளினூடான புத்திஜீவிகளை உருவாக்கும் காலத்தின் தேவையைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பென்றும் எடுத்துரைத்தார்.

“உங்களதும், உங்கள் நண்பர்களதும் மனங்களில் தேசிய சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு, இவ்வாறான பல்கலைக்கழகங்களின் விடுதிகளையும் வகுப்பறைகளையும், மைதானங்களையும், சிற்றுண்டிச்சாலைகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார். 

பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் பந்தங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவை என்றும் அந்தத் தொடர்பு, இந்த நாட்டினது அபிவிருத்திக்கு பெரும் ஊன்றுகோலாக இருக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான சம்பத் அமரதுங்க ஆகியோரும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

11.02.2022

Latest News right

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2025
நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின்…

தூதுவர்கள் ஒன்பது பேர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

டிச 02, 2024
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று…

இறுதி ரந்தோலி ஊர்வலத்தை பார்வையிட ஜனாதிபதி இணைந்து கொண்டார்

ஆக 20, 2024
Default Image
கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவின் இறுதி…

ஊடக விதிமுறைகள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதித் தேர்தல் ஆணையாளர்

ஆக 09, 2024
Default Image
தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்…

தேர்தல் காரணமாக IMF கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை - அமைச்சரவை பேச்சாளர்

ஆக 06, 2024
Default Image
தேர்தல் அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக 2027 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
சிறந்த சங்கப் பிதாமகராக இருந்து காலமான கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
மறைந்த கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர் கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு…