சமீபத்திய செய்தி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற 54ஆவது பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்..

நிதியமைச்சராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்பதவிக்கு நியமிக்கப்படும் போது இலங்கையின் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநராக செயற்பட்டார்.

ஜோர்ஜியாவின் டிபிலிஸில் நடைபெறவிருந்த இந்த பொதுக் கூட்டம் தற்போது நிலவும் தொற்று நிலைமை காரணமாக இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது. ஒஸ்ரியா மற்றும் மொங்கோலியாவின் ஆசியி அபிவிருத்தி வங்கி (ஏ.டீ.பீ.) ஆளுநர்கள் இக்கூட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை ஆளுநர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது பொதுக் கூட்டம் எதிர்வரும் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

வணக்கம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள கிடைத்தமையை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். எதிர்வரும் ஆண்டு இக்கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளமை மேலும் விசேடமானதாகும்.

கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக எதிர்பாராத வகையில் உயிரிழப்புகள் நேர்வதுடன், நமது வாழ்க்கை, சமூகம், பொருளாதாரம், எமது கலாசாரம் பயன்பாடுகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளது. அவ்வாறாக சூழலில் மீண்டும் ஒற்றுமையாக எழுந்திடுவதற்கான சரியான தருணமாக இதனை கருதுகின்றேன்.

இந்த நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு. எமது வலயம் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. அதேபோன்று அதனை சமாளிக்கும் சக்தி தொடர்பிலும் ஆசியா பிரபலமானது. எனவே, தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில் கூட, நமது பிராந்தியமானது உலகின் மேம்பாட்டிற்கு தலைமைதாங்குவது என்பதில் ஆச்சரியமில்லை.

அபிவிருத்தியடைந்துவரும் ஆசியாவிற்கு உலகை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. காலநிலை மாற்றத்திற்கு ஏற்புடைய சூழலுக்கான நிலையான பயன்பாட்டை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

எங்கள் கொள்கை தீர்வுகள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக நிலையானதாக இருக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கான நமது வாழ்க்கை முறையை நாம் பாதுகாக்க வேண்டும். நமது பொதுவான பிரச்சினைகளை தீர்க்க கூட்டு ஒத்துழைப்பே தற்போது தேவைப்படுகிறது.

இந்த இலக்கை அடைய, இயற்கை வளங்களை மிகவும் திறமையாக பயன்படுத்த உதவும் நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை பின்பற்ற நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.

எனவே, 'பசுமை பொருளாதாரத்தில்' சேவை வழங்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவத்தை இலங்கை ஏற்கனவே அடையாளங்கண்டுள்ளது. அதே நேரத்தில், பொதுத்துறை பொது சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கலை நமது அரசு துரிதப்படுத்தியுள்ளது.

கூடுதலாக, நாம் அனைவரும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிச் செல்வதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி) உறுப்பு நாடுகளுக்கு ஆதரவளிக்கும் என்று நம்புகிறோம்.

அபிவிருத்தியடைந்துவரும் ஆசியாவில் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான நகரங்களை உருவாக்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு புதிய அணுகுமுறையாக அமைவதுடன் அதன்மூலம் நெறிப்படுத்தப்பட்ட வள முகாமைத்துவம் இடம்பெறும்.

பெண்களின் அதிகாரமளித்தல் என்பது கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சமாகும். ஒரு நியாயமான சமூகத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை நாம் அடையாளம் வேண்டும்.

இது தொடர்பாக ஆசிய வலயம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதிலும், அவர்களுக்காக அதிக வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் உறுப்பு நாடுகளுக்கு 20 பில்லியன் டொலர் உதவியை உடனடியாக வழங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய ஆதரவை நாம் நினைவுகூர வேண்டும்.

தடுப்பூசிக்கு இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு 9 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆதரவுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

நாங்கள் ஒரு பயங்கரமான சவாலை எதிர்கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், இந்த சவாலை திறமையாக எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளதுடன், அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தேவையான தலைமைத்துவத்தை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

இறுதியாக, அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் 55ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல எதிர்பார்ப்பதுடன், உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய பிரார்த்திக்கின்றேன்.

பிரதமர் ஊடக பிரிவு

2021.05.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. சீன மக்கள் குடியரசின் வயிற் ஹோஸ் விகாரை வளாகத்தில் இலங்கை சம்பிரதாயத்தைக் கொண்ட பௌத்த விகாரையொன்று அமைத்தல்

சீன மக்கள் குடியரசு மற்றும் இலங்கைக்கும் இடையில் பேணப்பட்டு வரும் நீண்டகால தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் உலகளாவிய பௌத்த மக்களின் வணக்கத்திற்குரிய எமது நாட்டின் சம்பிரதாயத்தைக் கொண்ட பௌத்த விகாரையொன்று சீன மக்கள் குடியரசின் வயிற் ஹோஸ் விகாரை வளாகத்தில் அமைப்பதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளுக்காக அனைத்து நிதியையும் வயிற் ஹோஸ் விகாரையால் பொறுப்பேற்கப்படவுள்ளதுடன், குறித்த கட்டுமானம் இலங்கையின் புத்தசாசன விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும். அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சீன மக்கள் குடியரசின் வயிற் ஹோஸ் விகாரை மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. க.பொ.த (சாதாரண தரம்) மற்றும் க.பொ.த (உயர் தரம்) பரீட்சைகளை நடாத்தும் காலப்பகுதியை திருத்தம் செய்தல் மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கும் காலத்தைக் குறைப்பதன் மூலம் குறைந்தளவு காலப்பகுதியில் முதலாவது பட்டப்படிப்பை பூர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கல்

க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடல் மற்றும் க.பொ.த (உயர் தரம்) வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கும் இடையே எடுக்கும் காலப்பகுதி மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்காக மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கும் காலம் அதிகரிப்பதால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்வதிலும், பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்தி செய்வதிலும் முறையே அவர்களுடைய வயது முறையே 19-20 மற்றும் 25-26 வயதாகின்றது என்பது தெரியவந்துள்ளது. இப்பரீட்சை முறையில் இருக்கின்ற கட்டமைப்பு ரீதியான பொருத்தமற்ற தன்மை, நடைமுறையிலுள்ள தொழிநுட்ப விதிமுறைகள் தொடர்பாக நிர்வாக ரீதியான தாமதங்களால் உயர் கல்வியை துரிதமாகப் பூர்த்தி செய்து தொழில் சந்தைக்குப் பிரவேசிப்பதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையற்ற விதத்தில் காலத்தை செலவிட நேரிட்டுள்ளது. இந்நிலைமை அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் தீமை பயக்குகின்றதென்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், எதிர்வரும் காலங்களில் இந்நிலைமையை தடுப்பதற்காக கீழ்க்காணும் வகையில் நடவடிக்கையெடுப்பதற்காக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 10 மற்றும் 11 ஆம் தரங்களின் பாடவிதானங்கள் ஒரு வருடமும் 09 மாத காலப்பகுதிக்கு ஏற்றவாறு மீள்கட்டமைத்தல்

• க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும், க.பொ.த (உயர் தரம்) பீரட்சை டிசம்பர் மாதத்திலும் நடாத்துவதற்கும் ஒவ்வொரு பரீட்சைகளின் பெறுபேறுகளும் 03 மாதத்திற்குள் வெளியிடப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த செயன்முறைக்காக தற்போது எடுக்கின்ற 45 மாத காலத்தை 32 மாதங்களாகக் குறைப்பதற்கும் அதற்குத் தேவையான தொழிநுட்ப ரீதியான ஏற்பாடுகளை தயாரித்தல்

• உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யும் செயன்முறை மூலம் பெறுபேறு அதிகரிக்கின்ற மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கான புதிய ணு வெட்டுப்புள்ளி வழங்குவதன் மூலம் குறித்த பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கல் மற்றும் குறித்த பொறிமுறையை 2020 தொடக்கம் நடைமுறைப்படுத்தல்

03. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் ஒகாயாமா பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் உயிரியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பு நிறுவனம் (Graduate School of Environmental and Life Science) இற்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்

மாணவர்கள், பீடங்கள் மற்றும் பணியாளர்கள் குழாம் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்தல், ஒத்துழைப்பு ஆய்வுகள், கற்பித்தல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளல் மற்றும் ஆய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் ஒகாயாமா பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் உயிரியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பு நிறுவனம் (Graduate School of Environmental and Life Science) இற்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. வாகன விபத்துக்களைக் குறைப்பதற்காக சமூகத்தில் விசேட கவனத்தை ஏற்படுத்துவதற்காக வீதிப் பாதுகாப்பு வாரத்தை பிரகடனப்படுத்தல்

தற்போது நாளொன்றுக்கு 8-10 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதுடன், அவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாவர். அதனால் அவர்களில் தங்கி வாழ்பவர்கள் நிர்க்கதிக்குள்ளாவதுடன், வருடந்தோறும் குறித்த எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் காணலாம். கடந்த வருடத்தில் 2023 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 2114 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துக்களில் 963 விபத்துக்கள் இருசக்கர மோட்டார் சைக்கிளுடன் தொடர்புபட்டுள்ளதுடன் அதில் 987 பேர் பலியாகியுள்ளனர். முச்சக்கர வண்டிகள் மற்றும் பாரவூர்திகளின் விபத்துக்களால் வருடாந்தம் அண்ணளவாக 500 பேர் வரை பலியாகின்றனர். இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, வாகன விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் சர்வதேச தினமான நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் தேசிய பாதுகாப்பு வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கும், வாகன விபத்துக்களைக் குறைப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலை மாணவர்கள், சாரதிகள் மற்றும் பொதுமக்களை தெளிவூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்தவும், எதிர்வரும் காலங்களில் வருடாந்தம் நவம்பர் மாதத்தில் இவ்வாறு வாரத்தை நடாத்துவதற்கும் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. நுண்ணிய பிளாஸ்ரிக் ; (Micro Plastic) தொடர்பான ஆய்வு பற்றி ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துடன் இலங்கை அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்

நுண்ணிய பிளாஸ்ரிக் பாவனையால் சுகாதார, விவசாய, சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளுக்கு கேடு விளைவிக்கின்றமையால், குறித்த திண்மக் கழிவு தொடர்பாக இலங்கை பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. அதுதொடர்பான ஆய்வு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானியாவும் வட அயர்லாந்தும் உடன்பாடு தெரிவித்துள்ளதுடன், அதன் மூலம் நுண்ணிய பிளாஸ்ரிக் பற்றிய உள்ளுர் ஆய்வு இயலளவை அதிகரிப்பதற்காக ஒத்துழைப்புக் கிடைக்கும். அதற்கமைய இரண்டு வருடங்கள் அதிகாரம் கொண்ட வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகலுக்கு ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உடன்பாடு கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்;தை மேற்கொள்வதற்கும், இலங்கையிலுள்ள ஆய்வு இயலளவை அதிகரித்தல் உள்ளிட்ட பிளாஸ்ரிக் முகாமைத்துவத்தை நோக்காகக் கொண்டு குறித்த விடயத் தலைப்புக்குரிய அமைச்சுக்கள் மற்றும் குறித்த அமைச்சுக்களின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்றை நியமிப்பதற்கும் சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இந்தியாவின் புதுடில்லி நகரத்தில் அமைந்துள்ள நுர்டு ஆலோசனை சேவை கம்பனிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்

ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறையில் இளைஞர் யுவதிகளைப் பயிற்றுவிப்பதற்காக இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் 1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கு ஹோட்டல் சேவைகள் துறையில் கல்வி வசதிகளை வழங்குவதற்காக குறித்த நிறுவனத்தின் மாகாண பாடசாலைகள், அநுராதபுரம், பண்டாரவளை, பல்லேகலே, கொக்கல, இரத்தினபுரி, குருநாகல், யாழ்;ப்பாணம் மற்றும் பாசிக்குடா போன்ற நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த துறையில் தனியார் துறையினரின் பாடசாலைகள் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளதுடன், கடந்த தசாப்த காலத்தில் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பிம்பம் படிப்படியாக குறைந்துள்ளது. குறித்த நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காகவும் அதன் பிம்பத்தை மேம்படுத்தும் வகையிலும் அந்நிறுவனத்தின் கல்வி நிகழ்சிகளின் தரப்பண்பு தொடர்பான பகுப்பாய்வுடன் கூடிய ஆய்வுக்கற்கையை மேற்கொள்வதற்காக சுவிஸ்சர்லாந்து தூதவராலயத்தின் தலையீட்டுடன், புதுடில்லி நகரத்தில் அமைந்துள்ள நுர்டு ஆலோசனை சேவை கம்பனியின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நுர்டு ஆலோசனை சேவை கம்பனியின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக, குறித்த நிறுவனத்திற்கும் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட நடவடிக்கைகளை மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்திற்கு ஒப்படைத்தல்

தொழில் வழிகாட்டலை தேசிய மட்டத்திலிருந்து பிரதேச மட்டம் வரை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு செய்தல், புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி புதிய அணுகுமுறைகளின் கீழ் தேசிய நிகழ்ச்சித்திட்டமாக செயற்படும் நோக்கில் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் அப்போதைய ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விடயத்தலைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தை மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் கீழ் ஒப்படைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

08. நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கொள்கலன்களைப் பயன்படுத்தி வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்கள் (Container Based Cross –Fit Gym) 500 இனை நிறுவுதல்

உற்சாகமான வாழ்க்கை முறைக்கு இளைஞர் பரம்பரையை பழக்கப்படுத்துவதற்காகவும், விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கான உந்துதலை வழங்கும் நோக்கில் 'வெற்றி கொள்வோம்' எனும் தொனிப்பொருளில் கொள்கலன்களைப் பயன்படுத்தி வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்கள் (Container Based Cross –Fit Gym)  500 இனை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான மதிப்பீட்டு செலவு 625 மில்லியன்களாவதுடன், திட்டத்தின் மூலம் வருடாந்தம் 100,000 பொதுமக்களுக்கும் 5000 விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கும் நன்மையடைவதுடன், குறித்த தேக ஆரோக்கிய நிலையங்களைக் கொண்டு நடாத்தும் பொறுப்பை பிரதேச ரீதியாக இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கும் ஒப்படைப்பதற்கும், குறைந்தது ஒரு பயிற்றுவிப்பாளரை ஈடுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டம் 2021-2022 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தவும், 2021 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 250 இடங்களில் கொள்கலன்களைப் பயன்படுத்தி வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்களை நிர்மாணிப்பதற்காகவும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. அகக்கூட்டுயிரியல் பாவனைக்கான ஹியூமன் இமியூனோக்லொபின் பிபீ க்ரூம் 5-6 வயலஸ் 112,500 வழங்கலுக்கான பெறுகை

நோய் எதிர்ப்புக் குன்றிய நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் இம்மருந்தின் பெறுகைக்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகை இந்தியாவின் M/s Reliance Life Science (pvt) Ltd இற்கு 13.10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. முன்நிரப்பப்பட்ட எனக்சபாரின் சோடியம் ஊசிமருந்து 4000 IA+ , 0.4 மில்லிலீற்றர் சிரிஞ்சர் 840,000 வழங்கலுக்கான பெறுகை

இதய நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் இம்மருந்தின் பெறுகைக்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகை இலங்கையின் M/s Slim Pharmaceuticals  (pvt) Ltd இற்கு 541.80 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறை

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியுடன் கப்பல்கள் மூலம் பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து அதிகரித்துள்ளமையால் கடலோரப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்களுக்கான ஒழுங்குபடுத்தல்களின் தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அப்போதிருந்த அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சுடன் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் அவ்வாறனதொரு ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பை தயாரிக்கும் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக லொயிட் றெஜிஸ்ரார் ஏசியா நிறுவனத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த அனைத்துத் தரப்பினரையும் கேட்டறிந்து 04 ஒழுங்குவிதிகள் நகலாக்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு 52 ஆம் இலக்க வணிக் கப்பல்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய விடயத்திற்குப் பொறுப்பான குறித்த ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நகலாக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கான சட்டவரைஞரின் உடன்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் பொருளாதார நிலைமை, இலங்கை மத்திய வங்கியின் நிலைமை மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை தொடர்ந்துவரும் ஆண்டு ஆரம்பித்து 04 மாதங்களுக்குள் அமைச்சருக்கு கையளிக்கப்பட வேண்டும். அதற்கமைய, 2020 ஆண்டுக்குரிய இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை 2021 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாணயச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நிதி அமைச்சர் அவர்களுக்கு குறித்த ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்களில் நிதி அமைச்சர் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கமைய, 2020 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கொவிட்-19 தொற்று மூன்றாம் அலையில் PCR பரிசோதனை இயலளவை அதிகரித்தல்

கொவிட் புதிய திரிபு கண்டறிப்பட்ட பின்னர் அரச ஆய்வு கூடங்களில் கொவிட் PCR பரிசோதனைக்கான கேள்வி நாளொன்றுக்கு 20,000 ஆக அதிகரித்துள்ளதுடன், மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு. அதனால் குறித்த தேவைக்கான PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 
Last modified on செவ்வாய்க்கிழமை, 04 மே 2021 11:05
 
 
 

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாரச்சி மற்றும் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ஆகியோர் இன்று (03) முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றேனர்.

 கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவில் சமயக் கிரியைகளுக்கு முன்னுரிமையளித்து கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சிலரே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மிரிசவெடிய விகாராதிபதி சங்கைக்குரிய ஈதலவெடுனுவெவே ஞானதிலக தேரர், கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர், பேராசிரியர் சங்கைக்குரிய இந்துராகாரே தம்மரதன தேரர், பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர், சங்கைக்குரிய உடுவே தம்மாலோக தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோரும் பிரதமரின் ஊடகப் பிரிவு மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் நாட்டின் பொருளாதர மற்றும் சமூக தாக்கத்தை கருத்தில்கொண்டு நாட்டை முடக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின்போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
 
அமைச்சர் அவர்களே, உங்களை இலங்கைக்கு வரவேற்க கிடைத்தமை தொடர்பில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தொற்று நிலைமையையும் பொருட்படுத்தாது இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான உங்களது தீர்மானத்தை நாம் பாராட்டுகின்றோம்.
தொற்று நிலைமைக்கு மத்தியில் சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவினர் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் செய்தனர். உங்களது இவ்விஜயம் மற்றும் சந்திப்பின் ஊடாக எமது பலமான மற்றும் நட்பு ரீதியிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
முதலில், இந்த ஆண்டு இடம்பெறவுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவு மற்றும் அதன் அனைத்து சாதனைகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது உண்மையில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும்.
மேலும், வறுமையை ஒழிப்பதில் சீனா செய்த சாதனைகள் குறித்தும் நான் வாழ்த்துகிறேன். சீன அரசாங்கம் சுமார் 100 மில்லியன் கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது. மறுபுறம், வறுமையை ஒழிக்கும் அமெரிக்காவின் உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை 10 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவிற்கு அடைய முடிந்தது. இது ஒரு பெரிய சாதனையாகும்.
அமைச்சர் அவர்களே, இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பது தற்போது உலகளாவிய ரீதியில் தெளிவாகியுள்ளது. கொவிட் தொற்றுநோய் பரவல் ஆரம்பித்ததிலிருந்து, சகல இலங்கையர்களுக்காகவும் சீனா 600,000 சினோஃபார்ம் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தாராளமாக நன்கொடையாக வழங்கியிருந்தமையை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
கடந்த சில வாரங்களில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற்கொண்டு முழு நாட்டையும் முடக்காதிருப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் தீர்மானித்துள்ளோம். தொற்றுநோய்க்கு பிந்தைய நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
உலகளாவிய ரீதியிலிருந்ர் இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதே தற்போதைய எமது முன்னுரிமையாகவுள்ளது. அவ்வாறான முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு உங்களவு ஆதரவை நான் எதிர்பார்க்கின்றேன்.
அமைச்சர் அவர்களே, உங்களவு இவ்விஜயம் குறித்து மீண்டுமொரு முறை நன்றி தெரிவிப்பதுடன், தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதற்கும், உங்களுடனும் உங்கள் அரசாங்கத்துடனும் நெருக்கமாக தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்க்கின்றேன்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டிஆரச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட சுதேவ ஹெட்டிஆரச்சி அவர்கள், எதிர்வரும் வாரத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான சுதேவ ஹெட்டிஆரச்சி, அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார்.

25 வருடகால ஊடக வாழ்வில் பிரபலமான அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் முக்கிய ஊடக நிறுவனங்களில் உதவி முகாமையாளராகவும் முகாமையாளராகவும், உதவி பொது முகாமையாளராகவும் பொது முகாமையாளராகவும் பணிப்பாளராகவும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பதவிவகித்த திறமையான நிர்வாக அதிகாரியாவார்.

சுதேவ ஹெட்டிஆரச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமனம் பெறுவதற்கு முன்னர் சுவர்னவாஹினி ஊடக வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் பொறுப்பு – ஜனாதிபதி

      தெரிவிப்பு.

கொவிட் 19  நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும். மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது. இந்த சவாலை சிறப்பாக வெற்றிகொள்வதற்கு கொவிட் நோய்த் தொற்று பரவிய முதல் சுற்றின்போது செய்ததைப் போன்று சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ள அனைத்து சட்டதிட்டங்கள், வழிகாட்டல்களை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார தாபனம் தற்போது அங்கீகரித்துள்ள மற்றும் எதிர்காலத்தில் அங்கீகாரம் வழங்க உள்ள கொவிட் ஒழிப்பு தடுப்பூசிகளில் நான்கு தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலில் கொண்டுவரப்பட்ட அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி 925,242 பேருக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியின் இரண்டாவது கட்டம் மே மாதம் முதலாம் வாரத்தில் வழங்கப்படவுள்ளது. முன்னணி சுகாதார அதிகாரிகள், கொவிட் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 356,000 பேருக்கு இரண்டாவது கட்டம் வழங்கப்படும். எஞ்சிய தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி உற்பத்தி செய்யும் உலகில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் அரசாங்கம் தற்போது கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது.

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி 200,000 ஏப்ரல் மாதம் இறுதியிலும் 400,000 தடுப்பூசிகள் மே மாதத்திலும், 800,000 தடுப்பூசிகள் ஜூன் மாதத்திலும் 1,200,000 தடுப்பூசிகள் ஜூலை மாதத்திலும் கொண்டு வரப்படும். 13 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அன்பளிப்பாக சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 600,000 செனோபாம் தடுப்பூசிகள் எதிர்வரும் சில வாரங்களில் உலக சுகாதார தாபனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் நாட்டு மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அரச ஔடத கூட்டுத்தாபனம் பைசர் தடுப்பூசியை கொண்டு வருவதற்கு தேவையான ஆரம்ப உடன்படிக்கைகளில் தற்போது கைத்சாத்திட்டுள்ளதுடன், அவற்றை மிக விரைவில் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கொவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை ஒழிப்பதில் முக்கிய இடம் வகிப்பது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதாகும் என உலக சுகாதார தாபனத்தின் தலைவர் நேற்று ஜெனிவாவில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உரிய முறையில் முகக் கவசங்களை அணிவது, சவர்க்காரம் அல்லது தொற்று நீக்கிகளை பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல், தேவையற்ற பயணங்கள் மற்றும் விழாக்கள் போன்றவற்றில் இருந்து தவிர்ந்து இருப்பது இவற்றில் முக்கியமானதாகும்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது, ஒழுக்கப்பண்பாடான சமூக நடத்தைகள், வைரஸ் தொற்றை தடுப்பதற்கு சிறந்த தீர்வாகும் என்பது அநேக நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமான அனுபவமாகும்.

கொவிட் 19 பிரச்சினைக்கு தீர்வாக சிலகாலம் நாட்டை மூடி வைக்க வேண்டுமென சிலர் எண்ணுகின்றனர். ஆரம்ப காலகட்டங்களில் அத்தகைய நடைமுறையின் மூலம் திருப்தியான பெறுபேறு கிடைக்கப்பெற்றபோதும் நீண்டகாலத்தில் அது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார செயற்பாடுகளை முற்றாக முடக்கிவிடக்கூடிய வகையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு செய்ய முடியாது. எமது நாட்டின் வருமானம் ஈட்டும் பெரும்பான்மையானவர்கள் ஒழுங்குபடுத்தப்படாத வாழ்வாதார வழிகளில் தங்கியுள்ளனர்.

எனவே அரசாங்கம் தனது பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மக்களும் நாட்டினதும் தம்முடையதும் நலனைக் கருத்திற்கொண்டு தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது முற்றாக நிறுத்தப்படும் ...

அதிக விளைச்சலை பார்க்கிலும் உயிர்கள் எனக்கு மிகவும் பெறுமதியானது - ஜனாதிபதி

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது மிக விரைவில் முற்றாக நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக விளைச்சலை பெற முடியும். குளங்கள், கால்வாய்கள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதால் உயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை அந்த இலாபத்தால் ஈடுசெய்ய முடியாது. இரசாயன உரங்களின் தாக்கம் சிறுநீரக நோய் உட்பட பல தொற்றா நோய்களுக்கு வழிவகுத்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சிகிச்சைக்காக செலவாகும் தொகை மற்றும் உயிர்களுக்கு ஏற்படும் தாக்கம் அதிகம். ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த பிரஜையை உருவாக்குவதற்கு, நச்சு அல்லாத உணவுக்கான மக்களின் உரிமையை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும். இந்த நோக்கத்திற்காக நாட்டின் விவசாயத்துறையில் சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் (22) கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க சபைகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

நாட்டில் சேதன உர உற்பத்தியை அதிகரிக்க அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். உர மானியத்திற்கு பதிலாக சேதன உரத்தை பெற்றுக்கொடுக்க திட்டமிடுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். உர இறக்குமதிக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் 400 மில்லியன் டொலர்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட முடியும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தன்னை அதிகாரத்திற்கு தெரிவு செய்ததன் மூலம் மக்கள் கொள்கை சார்ந்த மாற்றத்தை எதிர்பார்த்தனர். நாட்டிற்காக அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அனைவரின் ஆதரவும் தேவை என்று ஜனாதிபதி அவர்கள் கூறினார்.

எத்தனோல் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டதன் மூலம் இலங்கை சீனி நிறுவனம் ரூ. 1100 மில்லியனை இலாபமாக பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக சாதாரண மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுமார் 2500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் பதவி உயர்வு மற்றும் போனஸ் ஆகியவற்றைப் பெறவும் முடிந்தது என்று இலங்கை சீனி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித் திட்டத்தால் நட்டத்தில் இயங்கிய பல நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்ற முடிந்தது என்று தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

நிறுவனங்கள் அடைய வேண்டிய இலக்குகள் தொடர்பில் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் தெளிவாகக் கூறுப்பட்டுள்ளது. அமைச்சரவை, இராஜாங்க அமைச்சுகளுக்கு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அடைய வேண்டிய முன்னேற்றம் ஆகியவை பற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. கூட்டுப் பொறுப்புடன் பணியாற்றி மக்கள் விரும்பும் கொள்கை மாற்றத்தை அடைய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி அவர்கள் தலைவர்களிடம் கூறினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.04.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

01. தேசிய சுவடிகள் கூடத்தில் டிஜிட்டல் காப்பகத்தை உருவாக்கல்

1640 தொடக்கம் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மற்றும் சுதந்திரத்தின் பின்னர் மிகவும் பெறுமதியான ஆவணங்கள் மற்றும் 19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் இலங்கையில் வெளியிடப்பட்ட பத்திரிகைகள் உள்ளிட்ட அனைத்து வெளியீடுகளதும் சட்ட ரீதியான காப்புக்கள் தேசிய சுவடிகள் கூடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு நாளாந்தம் அதிகளவான ஆவணங்கள் சேர்ந்த வண்ணம் இருப்பதுடன், அதற்காக டிஜிட்டல் வெளியீடுகள் மற்றும் ஆவணங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிஇஒளிபரப்புக்கள், இணையத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் போன்றன உள்ளடங்கும். அதற்கமைய குறித்த டிஜிட்டல் ஆவணங்களின் நம்பகத்தன்மை மற்றும் போலியற்றத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் டிஜிட்டல் காப்பு தொடர்பான சர்வதேச தரநியமங்களை பின்பற்றி டிஜிட்டல் காப்பகத்தை அமைப்பதற்காக புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாச்சார விவகார அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைத்தல்

விவசாயிகளின் உற்பத்திகளை நேரடியாக சந்தைப்படுத்துவதற்கும், போட்டித்தன்மை மூலம் மிகவும் வினைத்திறனான விலைப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமான வகையில் விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான 15 பொருளாதார மத்திய நிலையங்கள் நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்றது. அதற்கமைய மட்டக்களப்பு மற்றும் வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதுடன், யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முதலாம் கட்ட கட்டுமானப்பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ நிதியத்தை நிறுவுவதற்கும் முறையான பொறிமுறையை பின்பற்றி குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபார அலகுகளை ஒதுக்கி வழங்குவதற்கும் கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. தேயிலை செய்கையை ஊக்குவிப்பதற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையை திருத்தம் செய்தல்

2019 ஆம் ஆண்டில் மொத்த தேயிலை உற்பத்தி 300 மில்லியன் கிலோகிராம்கள் ஆவதுடன், அவற்றில் 75% வீதமான 225 மில்லியன் கிலோகிராம்கள் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேயிலை உற்பத்தியை உயர் மட்டத்தில் பேணுவதற்காக சிறிய தேயிலை தோட்டக்காணிகளில் உற்பத்திப்பெருக்கை அதிகரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. தேயிலையை மீள் பயிரிடல் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக 04 வருடங்கள் எடுப்பதாலும், அதற்கான செலவு அதிகமானதாலும் மீள் பயிரிடல் மற்றும் புதிய பயிரிடல் போன்றவற்றுக்கு போதுமானளவு ஆர்வம் காட்டாமையால் 2025 ஆம் ஆண்டளவில் 360 மில்லியன் கிலோகிராம்கள் உற்பத்தி இலக்கை அடைவதற்காக போதுமானளவு ஊக்குவிப்புக்கள் வழங்கவேண்டியுள்ளது. அதற்கமைய தேயிலை மீள்பயிரிடல் மானியத் தொகை ஹெக்ரயர் ஒன்றுக்கு புதிய பயிரிடல் மானியத் தொகையாக ஹெக்ரயர் ஒன்றுக்கு 400,000 ரூபாய்களில் இருந்து 500,000 ரூபாய் வரைக்கும் அதிகரிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 2021-2025 ஒருங்கிணைந்த திட்டத்தின் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக துரித பெறுகைச் செயன்முறையை நடைமுறைப்படுத்தல்

2021-2025 ஒருங்கிணைந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2021 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2025 இல் நாடளாவிய ரீதியில் 78.8% வீதமான வீட்டு அலகுகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த இலக்கை அடைவதற்காக நீர் விநியோகக் குழாய்கள் 40000 கிலோ மீற்றர்கள் வரை இடுவதற்கும் சமகால உற்பத்தி இயலளவு நாளொன்றுக்கு 2.35 மில்லியன் கனமீற்றர்களாக அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நீர் விநியோகத் திட்டங்களில் காணப்படும் சிக்கலான தன்மையால் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பெறுகைச் செயன்முறை ஏனைய நிறுவனங்களை விட அதிக காலம் எடுப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் நீர்க்குழாய்கள் மற்றும் உபகரணங்களின் பெறுகைச் செயன்முறையை ஒருங்கிணைந்த பொறிமுறையின் கீழ் வழங்குவதற்கும் மற்றும் அதற்கான அலகுக் கட்டண முறையை அறிமுகப்படுத்துவதற்கும் நீர் குழாய்கள் இடப்படும் ஒப்பந்தத்தை வழங்கும் போது அலகுக்கட்டண முறையை அறிமுகப்படுத்துவதற்கும் நீர்வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. 2021/2022 ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உணவுப்பொருள் விநியோகத்துக்கான ஒப்பந்தத்தை வழங்கல்

2021/2022 ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உணவுப்பொருள் விநியோகத்துக்காக ஒப்பந்தக்காரரை தெரிவுசெய்வதற்காக தேசிய போட்டித்தன்மை விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய 2021 ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 2022 ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உணவுப்பொருட்கள் விநியோகத்துக்காக தெரிவுசெய்யப்பட்ட விநியோகத்தர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை முடிவுறுத்தி புதிய சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை கொண்டுவரல்

2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஒட்டுமொத்த சுற்றுலாத்துறையை 04 முக்கிய நிறுவனங்களாக பிரித்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை சம்மேளனப் பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் போன்றன நிறுவப்பட்டுள்ளன. ஆனாலும் ஒட்டுமொத்த சுற்றுலாத்துறையும் 04 நிறுவனங்களுக்கு பிரிந்து உள்ளமையால் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் பிரச்சினை மேலெழுதல் மற்றும் வளங்கள் வீண்விரயம் போன்றன இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய சுற்றுலாத்துறையின் நிலைபேறான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்காக 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை முடிவுறுத்தி புதிய சுற்றுலா நடவடிக்கை சட்டத்தின் சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் அதன்மூலம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை சம்மேளனப் பணியகம் போன்றவற்றை இணைத்து 'இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபை' எனும் பெயரில் புதிய அதிகாரசபையை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் 'விசேட வைப்புக் கணக்கு' திறப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லையை நீடித்தல்

அந்நிய செலாவணியை எமது நாட்டுக்கு அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக 2020 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறையிலுள்ள விசேட வைப்புக் கணக்குக்கான ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் குறித்த கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறே குறித்த கணக்குகளில் காணப்படும் வைப்புக்களை தொடர்ந்து பேணும் நோக்கில் மேலதிக வட்டியை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் மாதம் வரையில் குறித்த வைப்புக் கணக்குகளில் 360.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளது. குறித்த விசேட வைப்புக் கணக்குகளை திறப்பத்தற்கான கால எல்லை 2021 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதியுடன் முடிவடைய இருப்பதால் தொடர்ந்து பணத்தை வைப்பிலிடுவதற்கு விருப்பம் தெரிவிக்கும் தரப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் குறித்த காலவரையறையை தொடர்ந்து நீடிப்பதற்காகவும், அதற்காக அந்நிய செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கட்டளைகளை பிறப்பிப்பதற்கும் நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக 06 மில்லியன் 'ஸ்புட்னிக் v' தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை குழுவின் பரிந்துரைக்கமைய 07 மில்லியன் 'ஸ்புட்னிக் v ' தடுப்பூசிகளை, ஒரு தடுப்பூசி 9.95 அமெரிக்க டொலர்கள் வீதம் 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்காக 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசியின் அளவுக்கு மேலதிகமாக 06 மில்லியன் 'ஸ்புட்னிக் v' தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காகவும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (04) முற்பகல் அனுராதபுரம் வரலாற்று முக்கியத்துவமிக்க ஜய ஸ்ரீ மகாபோதி வளாகத்தில் இடம்பெற்றது.

விவசாயிகள் தாம் பெற்றுக்கொண்ட அறுவடையின் முதற் பகுதியை காணிக்கையாக வழங்குவது பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் வருடாந்த சம்பிரதாயமாகும். 54வது தடவையாக இடம்பெற்ற தேசிய புத்தரிசி விழா அட்டமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச நாயக்க தேரரின் ஆலோசனையின் பேரில் விவசாயத்துறை அமைச்சும் கமநல சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

உரிய பருவ காலத்தில் மழை கிடைக்கப்பெற்று தமது பயிர் நிலங்கள் செழிப்புற்று விளங்க இயற்கையின் பலமும் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் நாலா திசைகளிலும் இருந்து வருகை தந்திருந்த விவசாய சமூகத்தினர் புத்தரிசி விழா சம்பிரதாயங்களில் பங்குபற்றினர்.

பாரம்பரிய சம்பிரதாயங்களின்படி புத்தரிசி விழா ஊர்வலமானது மங்கள வாத்தியங்களுடன் கிழக்கு வாசலின் ஊடாக ஜய ஸ்ரீ மகா போதியை வலம்வந்து, அங்கு பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரத்தில் மிகுந்த கௌரவத்துடனும் பக்தியுடனும் புத்தரிசி நிரப்பப்பட்டது.

சங்கைக்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பாத்திரத்தில் புத்தரிசியை நிரப்பும் சம்பிரதாயத்தை நிறைவேற்றினார்.

அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்திருந்த விவசாயிகள் பாத்திரத்தில் புத்திரிசியை நிரப்பும் சம்பிரதாயத்தில் இணைந்து கொண்டனர்.

புத்திரிசி விழாவிற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சஞ்சிகையின் முதல் பிரதி கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன அவர்களினால் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே நிகார ஜயசுந்தர பண்டாரவினால் ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நெய் பாத்திரம் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

புத்திரிசி விழாவுடன் இணைந்ததாக ஆதிவாசிகளினால் சம்பிரதாயபூர்வமாக ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தேன் பாத்திரம் ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோவின் சார்பில் பிரதித் தலைவர் உருவரிகே குணபண்டாவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஒன்பது மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் பிக்குகளினால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு விதை நெல்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். புத்திரிசி விழா நிகழ்வினைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், ஜய ஸ்ரீ மகாபோதிக்கு மலர்கள், வெள்ளி நாணயங்களை பூஜை செய்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களும் அயோமா ராஜபக்ஷ அம்மையாரும் அட்டமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச நாயக்கத் தேரரை சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்தனர்.

மகாசங்கத்தினர், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, சஷிந்திர ராஜபக்ஷ, ஷெகான் சேமசிங்க, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ்.குமாரசிறி ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உயிர்ப்பு விழா உலக வாழ் கிறிஸ்தவ மக்களின் உன்னதமான பண்டிகையாகும். உயிர்ப்பு விழாவின் பொருள் பாவத்திலிருந்து இரட்சிப்பு பெறுவதாகும். பாவத்திலிருந்து விடுபட்டு, செய்த பாவத்திற்காக மனம் வருந்தி புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதையும் இது குறித்து நிற்கிறது.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் திருநீற்றுப் புதன் தொடங்கி 40 நாள் தவக் காலத்தில் கிறிஸ்துவின் துன்பம், மரணம் மற்றும் இறப்பை நினைவுகூரும் ஆன்மீக கிரியைகளில் ஈடுபடுகிறார்கள். உயிர்த்த ஞாயிறன்று இயேசு பிரானின் உயிர்த்தெழுதலின் வெற்றிகரமான தருணத்தை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

இக்காலப் பகுதியில் கிறிஸ்தவ மக்கள் மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்கும் நோக்கத்துடன் இயேசு நாதர் சிலுவையில் துன்பப்பட்டு மரணத்தை வென்று மீண்டும் உயிர்த்தெழுந்து விடுதலையைப் பெற்றுத் தந்ததை நினைவு கூர்கின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடனும்  கௌரவத்துடனும் உயிர்த்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த தருணத்தில் காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காக நேர்ந்தது. இந்த துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இதயங்களின் வலி இன்னும் ஆறவில்லை. அந்த பாவச் செயலை புரிந்த குற்றவாளிகளான தனிநபர்களுக்கோ குழுக்களுக்கோ சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கப்பட மாட்டாது. அதே சமயம் சமூகத்தில் இதுபோன்ற அனர்த்தங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

இயேசு நாதர் அன்று போதித்த மனித விடுதலை பற்றிய செய்தி சமூகத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக விளங்குகிறது. இன்று உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் அன்பும் இரக்கமும் கொண்ட ஒரு மனிதாபிமான சமூகத்தில் வாழவும் இந்த உயிர்த்த நாளில் நாம் உறுதிகொள்வோம்.

உங்கள் அனைவருக்கும் இனிய உயிர்த்த நாள் வாழ்த்துக்கள்!

 

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானின் அருள் ஒளி கொண்டு அறியாமை இருள் அகற்றி, ஞானத்தின் மகிமையை அடைவதற்கான பிரார்த்தனையுடன், பழங்காலத்திலிருந்தே மகா சிவராத்திரி தினத்தில் மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகின் சக்திவாய்ந்த தெய்வமாக அவர்கள் கருதும் சிவபெருமானின் ஆசீர்வாதம் சமூக, பொருளாதார சுபீட்சத்திற்கும் சிறந்த ஆரோக்கியத்திற்கும் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஒரு பலமான உந்துசக்தி என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

இந்து சமய பக்தர்களினால் அனுஷ்டிக்கப்படும் ஒரு மகத்தான நாளான மகா சிவராத்திரி தினத்தில், அவர்கள் கண் விழித்து பல்வேறு கலாச்சார பெறுமானங்களுடன் கூடிய செயல்களில் ஈடுபட்டு சிவபெருமானுக்கு பூஜை செய்கிறார்கள். இதன் மூலம் நித்திய ஆசீர்வாதங்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மனதை ஒருநிலைப்படுத்தி பக்தி சிரத்தையுடன் சிவ வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் ஆன்மீக உயர்வை அடைய முடியம் என்று இந்து பக்தர்கள் நம்புகிறார்கள்.

பழங்காலத்திலிருந்தே இலங்கை வாழ் இந்துக்களின் இந்த அற்புதமான கலாச்சார விழா எமது சமூகத்திற்கு அளவிடற்கரிய பெறுமதியை சேர்த்துள்ளது. இந்த சமய நடைமுறைகள் பல்வகை கலை இலக்கிய அம்சங்களைப் போன்றே சிறந்த நடனப் பாரம்பரியத்திற்கும் வழிவகுத்துள்ளது.

கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோய் பரவலின் காரணமாக, இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மகா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அந்த கட்டுப்பாடுகளில் இம்முறை சிறிது தளர்வு இருந்தாலும், கடந்த வருடத்தைப் போன்றே இவ்வருடமும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி மகா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.
மகா சிவராத்திரி தின தீப ஒளி இந்து மக்களின் ஆன்மீகத்தை ஒளியூட்டுவதைப் போன்றே சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கும் சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்

Latest News right

“அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் – 2023” விண்ணப்பம் கோரல்

செப் 10, 2023
Default Image
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்தும் நோக்கில் வருடாந்தம்…

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

மே 23, 2023
Cabinet Decisions on 22.05.2023 Tamil page 0001
2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…