சமீபத்திய செய்தி

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் கலைஞர் ஜெக்சன் எந்தனியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) நேரில் சென்று பார்வையிட்டார்.

வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் குழாமை சந்தித்த ஜனாதிபதி ஜெக்சன் எந்தனியின் உடல்நிலைக் குறித்து கேட்டறிந்ததுடன் தற்போது தட்டுப்பாட்டிலுள்ள மருந்துகளை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கு வழிவகுப்பதாகவும் வைத்தியர்களிடம் உறுதியளித்தார்.

சிகிச்சை தொடர்பில் எவ்வாறான உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக தன்னை தொடர்புகொள்ளுமாறும் ஜனாதிபதி ஜெக்சன் எந்தனியின் மனைவியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஜெக்சன் எந்தனி அண்மையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

 

2022.08.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டி மற்றும் குறைந்தபட்ச தரநியமங்களை அறிமுகப்படுத்தல்

இலங்கையில் வாழ்கின்ற அநாதை, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ள பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, உடல் மற்றும் உள ரீதியான நல்விருத்தி போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறுவர் அபிவிருத்திச் சேவைகள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டிகள் மற்றும் முதன்மைச் சட்டங்கள் மாகாண மட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், தேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டியொன்று இல்லை. அதனால், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான துறைசார்ந்த அனைத்துத் தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த நிபுணர்களின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த 'இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டி மற்றும் குறைந்தபட்ச தரநியமங்கள்' இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திரதின விழா

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி வருகின்ற 75 ஆவது சுதந்திரதின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள்

ஜனாதிபதி

பாதுகாப்பு மற்று நிதி உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர்

  • கௌரவ தினேஷ் குணவர்த்தன

பிரதமர்

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

  • கௌரவ டக்ளஸ் தேவானந்தா

கடற்றொழில் அமைச்சர்

  • கௌரவ சுசில் பிரேமஜயந்த

கல்வி அமைச்சர்

  • கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்த்தன

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், வெகுசன ஊடக அமைச்சர்

  • கௌரவ அலி சப்ரி

 வெளிவிவகார அமைச்சர்

  • கௌரவ விதுர விக்கிரமநாயக்க

 புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர்

  • கௌரவ கஞ்சன விஜேசேகர

 மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்

  • கௌரவ டிரான் அலஸ்

 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

03.  விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களுக்காக இலங்கை அரசு மற்றும் நேபாள அரசுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளல்

இலங்கை அரசு மற்றும் நேபாள அரசுக்கிடையில் விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களுக்கு புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக முன்பிருந்த திறன் விருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய உற்பத்திகள் இராஜாங்க அமைச்சுக்கு 2021.06.21 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை இதுவரை கையொப்பமிடவில்லை. இருதரப்பினர்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாடுகளுக்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. நாவலப்பிட்டி அல் - சஃபா ஆரம்பப் பாடசாலைக்கு இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியொன்றை ஒதுக்கி வழங்கல்

 

1000 இரண்டாம் நிலைப் பாடசாலைகள் மீள்கட்டமைத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் நாவலப்பிட்டி அல் - சஃபா ஆரம்பப் பாடசாலை 2013 ஆம் ஆண்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்குத் தேவையான கட்டிட வசதிகள் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான நாலப்பிட்டி புகையிரத நிலையத்திற்குரிய பண்டங்கள் களஞ்சியத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பாடசாலையின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் குறித்த கட்டிடம் போதுமானதாக இன்மையால், நிரந்தரமான கட்டிடமொன்றை அமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கைப் புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான நாவலப்பிட்டி கொடமுதுன கரஹந்துன்கலவில் அமைந்துள்ள 02 ஏக்கர்களைக் கொண்ட காணித்துண்டை பாடசாலைக்காக சட்டபூர்வமாக ஒதுக்கி வழங்குவதற்காக கல்வி அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்களால் கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்திற்காக இலங்கை மற்றும் இந்திய அஞ்சல் அதிகாரிகளால் கூட்டாக முத்திரை வெளியிடல்

2022 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்திற்கு இணையாக 'ஜனநாயகம்' எனும் தொனிப்பொருளில் இரண்டு நாடுகளின் 'பாராளுமன்றங்களை' பிரதிபலிக்கின்ற வகையில் எமது நாட்டின் அஞ்சல் திணைக்களம் மற்றும் இந்திய அஞ்சல் திணைக்களத்தால் இரண்டு முத்திரைகள் வீதம் வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு நாடுகளாலும் வெளியிடப்படும் முத்திரைகளில் 3,000 முத்திரைப் பொதிகளும், 5,000 நினைவுப் பத்திரங்களும், 2,000 முதல் நாள் அட்டைகளையும் பரிமாற்றிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக இரண்டு நாடுகளின் அஞ்சல் திணைக்களங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தை தாபிப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரித்தல்

ஊடகத் துறையில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை அதிகரிக்கும் நோக்கில் 'இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்களின் நிறுவனம்' இனைத் தாபிப்பதற்காக 2021.10.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடாத்தல் குழுவால் குறித்த நிறுவனத்தைத் தாபிப்பதற்கு ஏற்புடைய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில் சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கும், இதற்கு முன்னர் முன்மொழியப்பட்டுள்ள 'இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்  நிறுவனம்' எனும் பெயருக்கு பதிலாக முன்மொழியப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயர் 'இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனம்' எனத் திருத்தம் செய்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவுதல்

 

இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவுவதற்காக 2013.08.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கான சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

கொழும்பிலிருந்து பதுளை வரையான வார இறுதி அதிசொகுசு 'எல்ல ஒடெசி' ரயில் பயணத்தை போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (13) அதிகாலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைத்தார்.

அதன் பின்னர் அமைச்சர் பயணிகளுடன் உரையாடியவாறு அதிகாரிகள் சகிதம் ரயிலில் பயணம் செய்தார்.

இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பதுளை நோக்கிச் சென்று ஞாயிறு கொழும்பை வந்தடையும். இதற்கு முன்னர் இச்சேவை கண்டியிலிருந்து எல்லை வரை ஒரு நாள் பயணமாகவே சென்று வந்தது. அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலுக்கமையவே ரயில்வே திணைக்களம் இச்சேவையை மீள ஆரம்பிக்க உத்தேசித்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

 

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

ஶ்ரீ தலதா உள்ளிட்ட அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதமும் அதற்கு பலமாக அமைய வேண்டும்
- கண்டி பெரஹரா நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த போதிலும் அந்த நெருக்கடியில் இருந்து நாடு நிச்சயம் மீண்டு வரும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கு தலதா மற்றும் அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதம் பெரும் பலமாக அமையுமென சுட்டிக்காட்டினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஶ்ரீ தலதா பெரஹரா விழா மற்றும் வருடாந்த நான்கு மகா விகாரைகளின் ஊர்வலம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற வைபவத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வைக் கொண்டுவரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக வந்த தியவடன நிலமே நிலங்க தேல உள்ளிட்ட நான்கு மகா தேவாலயங்கள் உள்ளிட்ட ஏனைய தேவாலயங்களின் நிலமேக்கள் ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியினால் வரவேற்கப்பட்டனர்.

பின்னர் தியவதன நிலமே சம்பிரதாயபூர்வமாக பெரஹரா நிறைவடைந்தமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஓலையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

ஊர்வலத்தில் பயணித்த யானைகளுக்கு அடையாள ரீதியாக உபசாரம் செய்யும் வகையில் ஜனாதிபதி "சிந்து" எனும் யானைக்கு பழங்கள் வழங்கி உபசரித்தார்.

பெரஹராவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சம்பிரதாயபூர்மாக பரிசுகள் மற்றும் விருதுகளை ஜனாதிபதி வழங்கி வைத்ததுடன், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் 07 அதி விசேட விருதுகள் உள்ளிட்ட 162 விருதுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. எசல பெரஹரா அறக்கட்டளை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன வருடாந்தம் இதற்கான அனுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் வரலாற்றுப் புகழ்மிக்க பெரஹரா (ஊர்வலம்) நிறைவு பற்றிய விடயங்கள் அடங்கிய அறிவிப்பை ஜனாதிபதி தலைமையிலான சபையில் சமர்ப்பித்தார்.

கிராமிய விகாரைகளுக்கான "எசல பெரஹரா அறக்கட்டளை" யிற்கான நிதியுதவி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டதுடன், "புனித தலதா கலாசாரம்" எனும் நூலும் இதன்போது ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

 

கண்டி எசல பெரஹெரவின் இறுதி ரந்தொலி பெரஹெர இன்று (11) இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அவர்கள் கண்டிக்கு வருகைதந்திருந்தார்.

இதேவேளை கண்டி எசல பெரஹெரவின் உத்தியோகப்பூர்வ இறுதி நிகழ்வு கண்டியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் நாளை (12) நடைபெறவுள்ளது.

கோவிட்-19 தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இவ்வருடம் ரந்தொலி பெரஹெர வெகுவிமர்சையாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

இலங்கையின் சினிமா துறை மற்றும் திரைப்படக் கலாசாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய திரைப்படக் கூட்டுதாபனத்தை அபிவிருத்தி செய்வதற்கும் தேசிய சினிமா கொள்கையொன்றை அமுல்படுத்துவது தொடர்பிலான திட்டமொன்றை நிறுவுவதுக்குறித்தும் கலந்துரையாடும் விசேட சந்திப்பொன்று வெகுசன ஊடக அமைச்சில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது. (10)

தேசிய திரைப்படக் கூட்டுதாபனத்தின் தலைவராக புதிதாக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி தீபால் சந்திரரட்ன திரைப்பட துறையில் தேர்ச்சிப்பெற்றவர்கள் கலைஞர்கள் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அத்துறையுடன் தொடர்புபட்ட பலரினதும் கருத்துக்களைப் பெறுவதே இச்சந்திப்பின் நோக்கமாகும்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன தற்போதைய இளைஞர்கள் மத்தியில் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்கும் வழக்கம் குன்றி வருவதனால் மக்களை கவரும் வகையில் புதிய சினிமா கலாசாரமொன்றை நாட்டில் உருவாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

அத்துடன் சினிமா என்பது ஒரு கலை.எனவே இத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் இதற்கான திட்டங்களும் கொள்கைகளும் வடிவமைக்கப்பட வேண்டுமென்றும் அவர் இதன்போது கூறினார்.

 

அனைத்துக் கட்சிகளுக்கும் நியாயமான  பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு

ஆட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.

ரிஷாத், மனோ, சீ.வி, ஹக்கீம், அனுர பிரிதர்ஷன ஆகியோருடன் ஜனாதிபதி சந்திப்பு

 

ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதே தமது நோக்கமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடன் (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ACMC), பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட குழுவினர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தன.

பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை நியமிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மேலும் பல இடைக்கால குழுக்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை தாம் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய சபையை ஸ்தாபிப்பதே பிரதான இலக்கென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவமும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் முழுமையான பிரதிநிதித்துவமும் அவசியமானதெனவும் தெரிவித்தார்.

குழுத் தலைவர்களுக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு சமமான அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கும் தேவையான சந்தர்ப்பங்களில்  அவர்களை அமைச்சரவைக் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளச் செய்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது விளக்கினார்.

குழு முறைமையை பிரதிநிதித்துவம் செய்வதா, அல்லது அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதா என்பதை அந்தந்தக் கட்சிகள் கலந்துரையாடி தமக்கு அறிவிக்குமாறும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 

பாராளுமன்றத்தை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாத்து, ஜனநாயகத்தை பாதுகாத்த இராணுவ வீரர்களுக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகும்.-ஜனாதிபதி தெரிவிப்பு.

நிறைவேற்றுத்துறையை கையகப்படுத்தி, சட்டத்துறையை முடக்கிய வன்முறையாளர்களை ஒடுக்கி ஜனநாயகத்தைப் பாதுகாத்த இராணுவத்தினருக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

பெலவத்த, அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (09) முற்பகல் விசேட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், இராணுவத்தினரை சந்தித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்று வன்முறையாளர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து சட்டத்துறையை முடக்கியிருந்தால் நாடு ஆட்சியை இழந்திருக்கும் எனவும் அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் நிலைமை முற்றிலும் மாற்றமாக அமைந்திருக்கும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் அமைதியான முறையில் அந்த நடவடிக்கையை முன்னெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.

இராணுவத் தலைமையக வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதி அவர்களை இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே வரவேற்றதுடன், பின்னர் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் உன்னத இடமான பாராளுமன்ற வளாகத்துக்குள் வன்முறையாளர்கள் பிரவேசிப்பதை வெற்றிகரமாக தடுத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வைத்ததோடு, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளுடன் குழுப் புகைப்படத்தில் தோன்றியதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதிதிகளின் குறிப்பேட்டில் குறிப்பொன்றையும் இட்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், “பாராளுமன்றத்தைப் பாதுகாத்தமைக்காக உங்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இன்று இந்த விசேட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். பலருக்கு இதன் முக்கியத்துவம் தெரியாது. எனவே விஷேடமாக இதைப் பற்றி சில விடயங்களைக் குறிப்பிட விரும்பினேன். இந்த நாட்டைப் பாதுகாப்பதும், இந்த நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் உங்களின் தலையாய கடமையாகும்.

மக்களின் இறையாண்மையை நடைமுறைப்படுத்த 03 பிரதான நிறுவனங்கள் உள்ளன. பாராளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை. இந்த 03 நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், இந்த நாடு கட்டுப்பாட்டை இழக்கும். அரசியலமைப்பு சிதையும். ஜனநாயகம் இழந்துவிடும். அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில்தான் நீங்கள் பாராளுமன்றத்தை பாதுகாத்தீர்கள்.

நிகழ்வுகள் பற்றி பேசுகையில், ஜூலை 09, முன்னாள் ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகை வன்முறையாளர்களால் கைப்பற்றப்பட்டது, பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை செலுத்தும் ஜனாதிபதி அலுவலகம் கையகப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியிடம் நடைமுறைப்படுத்த எந்த நிறுவனமும் இல்லை. மாலையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான "அலரி மாளிகை" கையகப்படுத்தப்பட்டது. அந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. அப்போது முன்னாள் ஜனாதிபதி கொழும்பில் இல்லாததாலும், அவர் இருக்கும் இடம் தெரியாததாலும், நான் பதவி விலகுவேன் என்ற நம்பிக்கையில் எனது வீட்டிற்கு தீ வைத்தார்கள். ஆனால் சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் பிரதமர் அலுவலகம் மாத்திரம் இருந்தது.

கடந்த 13ம் திகதி திரும்பி வந்து பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றினர். அப்போது நிர்வாகத்தை இயக்க எந்தவொரு அலுவலகமும் இல்லை. அப்போது ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகையும் இல்லாமல் போய்விட்டது. நிறைவேற்றுத்துறையாக, இயங்குவதற்கு எந்தவொரு இடமும் இருக்கவில்லை. மாலையில் நிலைமை மாறியது. பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். பாராளுமன்றத்தை கைப்பற்றினால், சட்டத்துறையை அமுல்படுத்த முடியாது. சட்டத்துறையை அமுல்படுத்த முடியாவிட்டால், நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை.

நீதிமன்றத்தை சுற்றிவளைத்து நீதிமன்றத்தை நிறுத்துவது எளிதான காரியம். மற்ற இரண்டு நிறுவனங்களைப் போல அல்ல. பாராளுமன்றத்தை இழந்தால் அது பெரிய பிரச்சனையாகிவிடும். அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. சபாநாயகருக்கு தெரியும், இந்த குழு வருவதை அறிந்ததும், கட்சி தலைவர்கள் கூட்டத்தை நிறைவு செய்தார். பாராளுமன்றத்தை பாதுகாக்க யாரும் இருக்கவில்லை. பாராளுமன்றம் வீழ்ந்தால் அரசியல் அமைப்பு பறிபோகும். எனவே, அவ்வேளையில் பாதுகாப்புச் சபையின் தலைவர்களிடம் குறிப்பாக சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் லியனகே ஆகியோரிடம் பாராளுமன்றத்தைப் பாதுகாக்குமாறு கூறினேன். பாராளுமன்றத்தை இழந்தால் ஆட்சி இல்லாமல் போகும். பாராளுமன்றம் இல்லாததால், பாதுகாப்பு அமைச்சை செயற்படுத்த முடியாது. அதனால்தான் உங்களிடம் அந்த செயற்பாட்டை ஒப்படைத்தேன்.

அதன்படி பாராளுமன்றத்தை கைப்பற்ற வந்தவர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களில் பலர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு இருந்ததால் அடுத்த நாளே நாட்டில் நிலைமை மாறியது. பாராளுமன்றம் பாதுகாக்கப்படாவிட்டால் இன்று நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

இது வடக்கில் பார்த்த பெரிய யுத்தங்கள் போல் இல்லை, ஜனநாயகத்தை பாதுகாக்க நீங்கள் எடுத்த ஒரு நடவடிக்கை. அன்று பயங்கரவாதத்தை ஒழித்தது போல் ஜனநாயகத்தையும் பாதுகாத்தீர்கள். இந்தப் பாராளுமன்ற கட்டடத்தை பாதுகாத்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு இடமளித்ததன் மூலம் அரசியலமைப்பு ரீதியான கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் நாடும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்போது இருப்பது பாராளுமன்றத்தை முன்னோக்கி கொண்டு செல்வதே ஆகும். பாராளுமன்றத்தை முன்னோக்கி கொண்டு சென்று பா.உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். உங்களின் நடவடிக்கை இப்போது முடிந்துள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

புதிய அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வர நாம் முயற்சிக்கிறோம். புதிய பாராளுமன்ற சீர்திருத்த முன்மொழிவுகளை கொண்டு வந்து சர்வகட்சி ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது பற்றி கலந்துரையாடப்படுகிறது,

இப்போது உங்கள் கடமையை செய்யுங்கள். இப்போது பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மற்றும் சபாநாயகர் அவர்களிடம் தயவு செய்து இதனை பாராளுமன்றத்தில் நினைவூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த அர்ப்பணிப்பிலிருந்து நாம் பயனடைய விரும்பினால், அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை மீண்டும் நாட்டின் நலனுக்காக செயல்படுத்த வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டுக்காக, பாராளுமன்றத்துக்காக, அரசாங்கத்துக்காக நன்றி தெரிவிக்கிறேன். இந்த நடவடிக்கையை எடுத்ததால், இப்போது எமக்கு நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியும். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால், அது பாராளுமன்றத்தில் செய்யப்பட வேண்டும். அதைப் பாதுகாக்க உழைத்திருக்கிறீர்கள். பாராளுமன்றம் செயல்பட வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீங்கள் அனைவரும் வான்வழிப் படையைச் சேர்ந்தவர்கள். அதைப் பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இது நம் நாட்டில் ஒரு முக்கிய அலகாகக் கருதப்படுகிறது.

அன்று 1992 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் இந்தப் படையை உருவாக்க வேண்டும் என்று நாம் கலந்துரையாடினோம். அந்த நேரத்தில், நான் அக்டோபர் மாதம் லண்டன் சென்றேன். நான் லண்டனில் ஜெனரல் மைக்கேல் ரோஸை சந்தித்தேன். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்கள். ஜெனரல் ரணதுங்க மற்றும் ஜெனரல் ஆடிகல ஆகியோர் அவருடன் இருந்தனர். அவர் இப்படி ஒரு பிரிவைத் தொடங்க வேண்டும் என்றார். அப்போதைய இராணுவத் தளபதி வைத்தியரத்னவிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது, பின்னர் ஜெனரல் ஜெரி சில்வா படையை ஆரம்பித்து இந்தப் பணியை சிறப்பாகத் தொடர்ந்தார். குறிப்பாக அப்போது தொடங்கியதை தொடர்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு


 

 

2022.08.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரசார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01.     உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையம் (UNESCO – ICHEI) மற்றும் இலங்கை அரசின் கல்வி அமைச்சுக்கும் இடையில் கல்வி ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையம் எமது நாட்டின் கைத்தொழில் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் பணியாளர்களின் திறமையை மெருகூட்டுவதற்காக இணையவழி ஊடாக பயிற்சிகளை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதன் கீழ் Artificial Intelligence, றொபோ தொழிநுட்பம், தரவுப் பகுப்பாய்வு, இயந்திராதிகள், பொறியியல் கற்கைகள், டிஜிட்டல் வடிவமைப்பு, மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் போன்ற துறைகளை அணுகுவதற்கான தளங்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பினர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. செலவு வரம்பின் அடிப்படையில் நீர்க் கட்டணத்தை அறிமுகப்படுத்தல்

 

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நிதி நிலைபேற்றை உறுதிப்படுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாகவும் தடையின்றியும் நீர் வழங்கலை மேற்கொள்வதற்கு கட்டணங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மூலதனக் கடன் பொறுப்புக்களை ஈடு செய்வதற்கு இயலுமான வகையில் தற்போது அறவிடப்படும் நீர்க் கட்டணம் மற்றும் மலக்கழிவகற்றல் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு நீர்வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பிராந்தியக் கைத்தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான காணிகளை வழங்கல்

பிராந்திய மட்டத்தில் கைத்தொழிற்றுறையை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் மூலம் 'பிராந்திய கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டம்' நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள 25 முதலீட்டாளர்களுக்கு 13 கைத்தொழில் பேட்டைகளில் காணித் துண்டுகளை வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.     பாடசாலை மட்டத்தில் ஜப்பான் மொழித் தேர்ச்சியை ஆரம்பித்தல்

இலங்கை அரசு மற்றும் ஜப்பான் அரசுக்கிடையில் கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தொழிநுட்ப சேவைக்காலப் பயிலுனர்களாக, விசேட நிபுணத்துவங்களுடன் கூடிய வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 14 துறைகளில் தொழிலுக்கு விண்ணப்பிப்பதற்காக இலங்கையர்களுக்கு இயலுமை உண்டு. அதற்காக, ஜப்பான் மொழித் தேர்ச்சி கட்டாயமான தகைமையாக இருப்பதுடன், பல கட்டங்களாக நடாத்தப்படும் பரீட்சைகள் மூலம் குறித்த தகைமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்துவரும் 05 ஆண்டுகளில் விசேட நிபுணத்துவ வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 345,000 தொழிலாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கை உள்ளிட்ட 07 நாடுகளுடன் ஜப்பான் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் தொழிநுட்பவியல் பாடவிதானத்தின் கீழ் ஜப்பான் மொழி மற்றும் ஆங்கில மொழிக் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், ஜப்பான் வேலைவாய்ப்புக்களை இலக்காகக் கொண்ட பராமரிப்புச் சேவைகள், விருந்தோம்பல் சேவைகள், கட்டடங்கள் தூய்மையாக்கல், விவசாய நடவடிக்கைகள், மோட்டார் வாகன தொழிநுட்பவியல் அல்லது மின்னியல் மற்றும் இலத்திரனியல் தொழிநுட்பத் துறைகளில் மென் திறன்களை விருத்தி செய்வதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கான விமான சேவைகள் காப்புறுதிக் காப்பீட்டுக்கான ஒப்பந்தம் வழங்கல்

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனி தனது விமானங்களுக்கு 04 வகையான காப்புறுதிக் காப்பீட்டின் கீழ் காப்புறுதிச் சேவைகளைப் பெற்றுக் கொள்கின்றது. குறித்த 04 காப்புறுதிக் காப்பீடுகளுக்காக காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள பொதுக் காப்புறுதிக் கம்பனிகளிடமிருந்து மட்டுப்பட்டுத்தப்பட்ட தேசியப் போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் குறித்த ஒப்பந்தத்தை இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியனுசரணை வழங்குகின்ற ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 2 கருத்திட்டங்களின் அடுத்த கட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியனுசரணை வழங்குகின்ற ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 2 கருத்திட்டங்களின் கீழ் 6,250 சதுர கிலோமீற்றர் கிராமிய வீதிகளும், 750 சதுர கிலோமீற்றர் தேசிய வீதிகளும் அபிவிருத்தி செய்து, பராமரிப்பதற்காக 140 சிவில் வேலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 4,800 சதுர கிலோமீற்றர் கிராமிய வீதிகளும், 300 சதுர கிலோமீற்றர் தேசிய வீதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த கருத்திட்டங்களை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் 1 வது கருத்திட்டத்தின் 5 ஆம் கட்டத்திற்காக 243 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2வது கருத்திட்டத்தின் 4 ஆம் கட்டத்திற்கான 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07 . வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

 

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் விதிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல், கலால் வரி (52 ஆம் அத்தியாயம்) இன் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் உள்ளடங்கிய 02 வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளுக்காக மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்தல் செய்தல்

சுவட்டு எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் இலத்திரனியல் வலுவைப் பயன்படுத்தி இயங்குகின்ற வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இலத்திரனியல் மோட்டார் முச்சக்கர ஊர்திகளை இலங்கையில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்குமாறு பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், அதற்கான சட்ட ஏற்பாடுகள் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் காணப்படாமையால், குறித்த சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளை பதிவு செய்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் குறித்த சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்தம் செய்தல்

அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளல் (Knowledge Process Outsourcing) வியாபாரச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளல் (Business Process Outsourcing), வேறு நாடுகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாக மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அலுவலகங்கள் (Back office) மற்றும் தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட (ICT enabling services) வியாபார நிறுவனங்களின் இயல்புகளுக்கமைய குறித்த தொழில்களில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வேறு நாடுகளின் நேர அட்டவணைக்கமைய பணிபுரிவதற்கு நேரிடுகின்றது.

ஆனாலும், 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் மாலை 6.00 மணிக்குப் பின்னர் பெண்களை மட்டுப்படுத்தப்பட்ட தொழில்களில் மாத்திரமே பணியில் அமர்த்தலாம். குறித்த நிலைமையின் கீழ் பெண்களை இரவு வேளைகளில் தொழிலில் அமர்த்துதல் தொடர்பாக தற்போது காணப்படும் வரையறுக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதற்காக 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10.   அமைச்சரவை உப செயற்குழுக்களை நியமித்தல்

அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் சட்டரீதியான மற்றும் ஏனைய ஏற்புடைய விடயங்களை ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய விடயதானங்களுக்கு அமைவாக சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் தொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் அமைச்சரவை உப செயற்குழுக்களை நிறுவுதல் பொருத்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய கருத்திட்டங்களை ஆரம்பித்தல் மற்றும் பெறுகைக் கோரல் நடவடிக்கைகள் போன்ற அரச செலவுகள் தொடர்பான யோசனைகள் பற்றி கொள்கை ரீதியான பரிந்துரைகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அரச செலவுகள் முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவொன்றை நியமிப்பதற்காகவும், அரச சேவை நியமனங்கள், பதவியுயர்வு, இடமாற்றம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்ற நிறுவன ரீதியான நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் பற்றி சமர்ப்பிக்கப்படும் யோசனைகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு கொள்கை ரீதியான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையில் நிறுவன ரீதியான விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவை நியமிப்பதற்காவும் கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபசெயற்குழுவை நியமித்தல் மற்றும் உணவுப்பாதுகாப்புக் குழுவை அமைத்தல்

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தி வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்கு அவசியமான கொள்கை ரீதியான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அமைச்சரவைக்குப் பரிந்துரைப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் வாழ்க்கைச் செலவு தொடர்பான உபசெயற்குழுவை நியமிப்பதற்கும், குறித்த உபசெயற்குழு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதற்காக சந்தை, வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையின் கீழ் உணவுப் பாதுகாப்புக் குழுவை நியமிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்சி அவசர நிவாரண உதவித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

 

வறுமைப்பட்டவர்கள் மற்றும் இடர்களுக்கு உள்ளாகியவர்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் 'உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்சி அவசர நிவாரண உதவித்திட்டம்' எனும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்படப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணையின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள் சிலவற்றில் காணப்படும் மேலதிக நிதியை மீளாய்வின் மூலம் ஒதுக்கிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், கருத்திட்ட செயற்பாடுகளின் நிதியிடலுக்காக சுபீட்சமான மற்றும் ஆசிய பசுபிக் வலய துரிதமீட்சிக்கான ஜப்பான் நிதியத்தால் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், அதற்கமைய ஏற்புடைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. திரவப் பெற்றோலிய சமையல் எரிவாயுக்கான திருத்தப்பட்ட விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தல்

தொடர்ச்சியான சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் செலவு வரம்பின் அடிப்படையில் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 05 ஆம் திகதி சமையல் எரிவாயு விலையைத் திருத்தம் செய்வதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்

சமகாலத்தில் நாட்டில் நிலவுகின்ற மோசமான வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறையால், தொடர்ச்சியாக பெற்றோலிய உற்பத்திப் பொருட்களின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் போட்டித்தன்மையான தரப்பினர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம்த்திற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறீப்பிட்டுள்ளார்.

 இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை வகுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் உறுதிப்பாட்டை ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்றுள்ளார். சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், பொதுமக்களுடன் கலந்தாலோசிப்பது உட்பட அனைவருடனான ஒருமித்த கலந்துரையாடல்களை அவர் பாராட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்களுக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானம், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான ஒத்துழைப்பை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறது என்றும் அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினூடாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும். அரச ஊழியர்கள் காத்திரமான சேவையை நாட்டுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன்போது 22ஆம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவையெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜகிரியவிலுள்ள ஶ்ரீ கோத்தம தபோவன விஹாரைக்கு விஜயமளித்து இலங்கை அமரபுர மஹா நிக்காயவின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய தொடம்பஹல சந்திரசிறி தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…