சமீபத்திய செய்தி

தபால் சேவை ஊழியர்களினதும், ஊடகவியலாளர்களதும் தேவைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி புதிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று தெரிவித்தார். 

வெகுஜன ஊடக அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள், ஊடக அமைச்சில் உத்தியோகபூர்வமாக இன்று கடமைகளை பொறுப்பேற்றார். இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மாவட்ட ரீதியான வேலைதிட்டமொன்றை மேற்கொள்ள, அமைச்சருடன் கலந்துரையாடி, அதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் மகா சங்கத்தினரின் நல்லாசியுடன் தனது கடைமைகளை சற்றுமுன்னர் ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் 13வது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (09) முற்பகல் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த களனி ரஜமகா விகாரை புனித பூமியில் இடம்பெற்றது.

நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 முதல் 2015 வரை இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐம்பது வருட அரசியல் வரலாற்றைக் கொண்டவர். 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், 1995ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமைச்சரவை அமைச்சராக குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளை நிறைவேற்றினார்.

2004 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதன் முறையாக பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அவர், 2018 ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இரண்டாவது முறையாகவும், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார்.

பத்து வருட காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சுமார் முப்பது வருட காலமாக நாட்டை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து நாட்டை துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச்சென்றார்.

குருணாகல் மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 527,364 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார். இது பொதுத் தேர்தலொன்றில் அபேட்சகர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்புவாக்குகள் என வரலாற்றில் பதிவானது.

இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து பிரதமர் பதவிக்கு நான்காவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்ட முதலாமவராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரலாற்றில் இடம்பிடித்தார்.

மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமர் அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினர். பதவிப் பிரமாண நிகழ்வை தொடர்ந்து ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் விகாரைக்கு சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டனர். பிரதமர் பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி அவர்கள் பிரதமரை சூழ திரண்டிருந்த மக்களிடம் சென்று அவர்களுக்கு தனது வணக்கத்தை தெரிவித்தார்.

மகாசங்கத்தினர் மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர், தூதுவர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள, புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஆகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றம் 2020 ஆகஸ்ட் 20ஆம் திகதி கூட்டப்படவுள்ளது.

அரசியலமைப்பின் மூலமும் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் மூலமும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. இது பற்றி அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நல்லிரவு வெளியிடப்பட்டுள்ளது.

புத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி.மாரசிங்க ஓய்வுபெற்ற ஆசிரியை இரண்டு இலட்சம் ரூபாய்களை கொவிட் நிதியத்திற்கு ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (06) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்து, மாதம்பை தனிவெல்லே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இந்த அன்பளிப்பு கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்களே,

“சட்டம், நீதி, தர்மத்தை பாதுகாக்கின்ற அரசாங்கம் – தன்னிறைவடைந்த நாடொன்றை எமக்கு கையளியுங்கள்”

அவர் ஐயாயிரம் ரூபாய் தாள் காசுகளை ஒன்று சேர்த்து வழங்கிய இரண்டு இலட்சம் ரூபாவை சுற்றிய கடதாசியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

காணிப் பதிவின்போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்தல் நடவடிக்கை தொடர்பாக இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

காணிப் பதிவுசார் நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவின் ஊடாக உறுதிப்பத்திரம், காணி பொழிப்பு அறிக்கை கணனிமயப்படுத்தப்படும். பொழிப்பு அறிக்கை பெற்றுக்கொள்ளும்போது கணனிமயப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கும் சட்டத்தரணிகளுக்கு, பத்திரத்துறை பதிவாளர்களுக்கு மற்றும் எந்தவொரு நபருக்கு அல்லது அரச நிறுவனத்திற்கு online மூலம் காணி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் காணி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்துடன் (ICTA) ஒன்றிணைந்து ஆகஸ்ட் மாதமளவில் இவ்வேலைத்திட்டத்தை மக்கள்மயப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு  ஈ – காணி (இலத்திரனியல் முறைமை)யின் கீழ் பதிவு செய்யும் காணிகளுக்கு இலத்திரனியல் கணக்குப் புத்தகம் ஒன்றையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, பதிவாளர் நாயகம் என்.சி.வித்தான, காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சி.எம்.ஹேரத், காணி உரித்துகள் நிர்ணய ஆணையாளர் நாயகம் ஜி.எம்.எச்.பிரியதர்ஷனி, நில அளவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சி.பெரேரா இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் ஜயந்த த சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் சென்றிருந்தனர்.

கொழும்பு One Galleface – PVR திரையரங்கில் நேற்று (28) பிற்பகல் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. சரத் கொத்தலாவல மற்றும் குமார திரிமாதுர ஆகியோரின் இணை  இயக்கத்தில் உருவான “த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, ரவிந்திர குருகே மற்றும் எச்.டி.பிரேமசிறி ஆகியோர் ஆவர்.

ஜூலை 02ஆம் திகதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் “த நியுஸ் பேப்பர்” திரைப்படம் திரையிடப்படுவதுடன், அன்று காலை 10.30 முதல் காட்சியை இலவசமாக பார்வையிடுவதற்கு  பொதுமக்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படும்.

கொவிட் ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற சுகாதார ஊழியர் குழுவினர், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி ஒருமுறை இத்திரைப்படத்தை இலவசமாக பார்வையிட முடியும்.

ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் திரைப்படத்தின் விசேட காட்சியை பார்வையிட்டனர்.

பிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட ஆலோசனைகளைப் பெற்று வைப்பாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி அலுவலகம், மத்திய வங்கி, திறைசேரி மற்றும் வைப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவொன்றை அமைத்து எதிர்கால செயற்பாடுகளை கண்காணிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ETI மற்றும் த பினான்ஸ் வைப்பாளர்களுக்கு நிதியை மீள வழங்கும் வழிகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

ETI நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி இந்நிறுவனங்கள் தொடர்பாக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இவ்விரு நிறுவனங்களிலும் 06 இலட்சத்திற்கும் குறைவான பெறுமதியுடைய வைப்புகளை கொண்டுள்ளவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும். இரு நிறுவனங்களுக்கும் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் கையகப்படுத்தியேனும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அடுத்த நிதிச்சபைக் கூட்டத்தின்போது மக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக் குறைகளை ஆராய்ந்து அதிகபட்ச தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன் உறுதியளித்தார்.

மத்திய வங்கியின் குறைபாடுகளை சரிசெய்து மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நிறுவனத்தின் கௌரவத்தையும் பொறுப்பையும் உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.

ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிந்து வழக்கு தொடராது அதனை கையகப்படுத்தி மக்களுக்கு சொந்தமான நிதியை மீளளிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். நிதி நிறுவனங்களுக்கு கடனை செலுத்துவதிலிருந்து விலகிக்கொள்பவர்களுக்கு எதிராகவும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் இரு நிறுவனங்களினதும் வைப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவொன்றும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

மதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.

சேவைப்பிரமாணத்தை தயாரிக்கும் பணிகளை விரைவுப்படுத்தவும் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிறுவன மட்டத்தில் தீர்வுகளை கண்டறிவதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

இலங்கை மதுவரி திணைக்களத்தின் தொழிற்சங்க கூட்டமைப்புடன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் பயிலுனர்களைக்கொண்டு திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.

நீண்டகாலமாக ஒரே பதவியில் சேவை செய்யும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு முறைமையொன்றை அறிமுகப்படுத்தவும் கடமைகளை நிறைவேற்றும்போது பௌதீக வளப்பற்றாக்குறைக்கு தீர்வு வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கீழ் நிலை பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது, திறமைகள் இல்லாத குறைந்த வருமானம் பெறுவோருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மதுவரி ஆணையாளர் ஏ.போதரகம ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இக்கலந்துரையடலில் பங்குபற்றினர்.

இரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்…

கல்விச் சேவை வரியை திருத்துவது குறித்து கவனம்….

சுகாதார பரிந்துரைகளை கடைப்பிடித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க அனுமதி…

தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் முன் வைத்த ஆலோசனைகள் பலவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கற்பித்த தனியார் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 250 ஆக மட்டுப்படுத்துவது கடினம் என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர். அதுபற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், இருவேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்துவதற்கு சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையுடன்  அனுமதி வழங்கினார்.

கொவிட் 19 காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தனியார் வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் 19 தொற்று காரணமாக க.பொ.உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றக்கூடிய மாணவர்கள் 05 மாதங்களுக்கு மேலாக கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளனர். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் இது போன்ற சூழ்நிலையையே எதிர்கொண்டுள்ளனர். இவ்விடயங்களை பரிசீலித்து குறித்த பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகளை மாற்றியமைப்பதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராயும்படியும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் பரீட்சைக்கான திகதிகளை தீர்மானிப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு முடியாத நிலை பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியுள்ளனர். அவைபற்றி தனது கவனத்தை செலுத்திய ஜனாதிபதி அவர்கள், பரீட்சை வினாத்தாள்களை தயாரிக்கும்போது வினாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மாணவர்களுக்கு தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான இயலுமையை பரிசீலிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

தற்போதைய கல்விச் சேவை வரி 24% வீதமாகும். அதனை திருத்தி அமைப்பது தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.  தனியார் வகுப்பு பிரச்சாரத்திற்கான துண்டு பிரசுரங்களை சுகாதார விதிமுறைகளுக்கேற்ப விநியோகிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் அனுமதி வழங்கினார்.

ஞாயிறு, பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாமென பௌத்த ஆலோசனை சபை முன்வைத்த வேண்டுகோளை ஜனாதிபதி அவர்கள் இக்கலந்துரையாடலின்போது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்துவதை முழுமையாக தவிர்ப்பதற்கு ஆசிரியர்கள் தமது விருப்பத்தை தெரிவித்தனர்.

க.பொ.த உயர் தரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஞாயிறு காலை வகுப்புக்களை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மீளாய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்கள், கொவிட் ஒழிப்பிற்கும் மற்றும் நாட்டின் அனைத்து துறைகளையும் முன்னேற்றுவதற்கும் எடுத்துள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக தனியார் வகுப்பு ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

அமைச்சர் டளஸ் அலகப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர். ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத்பூஜித, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உள்ளிட்ட தனியார் வகுப்பு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் பலர்  இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் 2020.03.31 மற்றும் 2020.04.01 ஆம் திகதிகளில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர அவர்கள் 2020.04.06 ஆம் திகதி பதில் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள முழுமையான கடிதம் வருமாறு;

திரு. மஹிந்த தேசப்பிரிய அவர்கள்,

தலைவர்,

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு

சரண மாவத்தை, இராஜகிரிய

2020பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி

2020.03.31 மற்றும் 2020.04.01 ஆம் திகதிகளில் தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மக்கள் குடியரசின் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ பணிகள் பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு அனுப்பப்படும் கடிதம் எனது அலுவலகத்திற்கு கிடைக்கு முன்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருப்பதும், அக்கடிதங்கள் வேறு நபர்களுக்கும் பிரதிகள் குறிப்பிடப்பட்டிருப்பதையிட்டும் நான் ஆச்சரியமடைகின்றேன்.

கீழ்வரும் தகவல்களை சுறுக்கமாக குறிப்பிடுவது பொறுத்தமானதாகும்.

  1. 2020.03.03ஆம் திகதிய2165/8ஆம் இலக்க வர்த்தமானி மூலம் 2020.03.02 ஆம் திகதி நல்லிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்தை 2020.05.14 ஆம் திகதி கூட்டுவதற்கு திகதி குறிப்பிடப்பட்டது.
  2. அவ்வறிவித்தலின் மூலம் புதிய பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு2020.04.25 ஆம் திகதி குறிப்பிடப்பட்டது.
  3. அதன் பின்னர்,

                (அ) பல்வேறு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.

                (ஆ) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சுயாதீன குழுக்கள் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 15வது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படுவதற்கான வேற்பாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.

                (எ) அதில் வேட்பாளர்களின் எழுத்து மூல அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

                (ஏ) பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 16 மற்றும் 17 வது உறுப்புரையின் பிரகாரம் கட்டுப்பணமும் செலுத்தப்பட்டிருந்தது.

குறித்த நிலைமைகளின் கீழ் பல சுயாதீன வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்

(அ) பாராளுமன்றம் கலைக்கப்பட்ட கட்டளையை,

(ஆ) தேர்தல் திகதி குறிக்கப்பட்ட கட்டளை,

(இ) வேட்புமனு கையளிக்கும் திகதி மற்றும்

(எ) குறித்த தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வேட்புமனுக்களை சமர்ப்பித்தல்

ஏற்றுக்கொண்டு உரிய முறையில் செயற்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24வது உறுப்புரையின் பிரகாரம் 24(1) உறுப்புரையின் A முதல் D வரையான உட்பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை குறிப்பாக எடுத்துக்காட்டி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி மூலம் அறிவிப்பொன்றை செய்திருக்க வேண்டும்.

2020.03.20 ஆம் திகதிய 2167/12 வர்த்தமானி அறிவித்தலில் 24(1) உறுப்புரையின் A மற்றும் C உட்பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மட்டும், அதாவது அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் 2020 ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும் என்றும் வாக்களிப்பு இடம்பெறும் தேர்தல் மாவட்டங்களையும் குறிப்பிட்டு அறிவிப்பொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட 2020.03.21 ஆம் திகதிய 2167/19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் 2020.04.25 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்றும், 2020.04.30ஆம் திகதி முதல் 14 நாட்களுக்குப் பின்னர் வரும் ஒரு நாளில் தேர்தல் நடைபெறும் திகதி குறிப்பிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

2020.04.25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாதாயின் 24(03) உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் தேர்தலை நடத்தக் கூடிய வேறு திகதியொன்றை விசேடமாக குறிப்பிட 24 (3) உறுப்புரையின் ஏற்பாடுகளின் கீழ் ஆணைக்குழு கடப்பாடுடையது என்பதை கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அதில் தேர்தல் நடத்தப்படும் திகதி, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24(3) உறுப்புரையின் கீழ் பகிரங்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதிக்கு 14 நாட்களுக்குப் பின்னராக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு கிடைத்துள்ள ஆலோசனையின் பேரில் 2020.05.28 ஆம திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாது என்ற அறிவித்தலை தற்போதைய சந்தர்ப்பத்தில் செய்ய முடியாது. தேர்தல் வாக்களிப்பு இடம் பெறும் திகதியை குறிப்பிடுவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்பதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புக்களில் தலையிட மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் எண்ணவில்லை.

பிற்போடப்பட்ட தேர்தல் குறித்து அறிவிக்கும் கால எல்லை பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24(3) உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 14 நாட்களுக்கு குறையாத காலமாகும் என்று அதாவது, பிற்போடப்பட்ட தேர்தல் வாக்களிப்பை 15வது நாளிலேனும் நடத்த முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தேர்தலில் வாக்களிப்பதற்கு இந்நாட்டில் உள்ள மக்களுக்கு உரிமையுள்ளது என்றும் அது அவர்களது தனி உரிமை என்பதையும் நான் குறிப்பிட வேண்டியதில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களையும் சாரம்சம்படுத்தி நோக்கும் போது அரசியலமைப்பின் 129 அத்தியாயத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் பிரச்சினை எழவில்லை என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு எனக்கு ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளது.

பீ.பீ ஜயசுந்தர

ஜனாதிபதியின் செயலாளர்

ஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத ஓய்வூதிய சம்பளத்தையும், இரு கண்களையும் இழந்த உயன ஹேவகே அசோக தனது சேமிப்பிலிருந்த 5 லட்சம் ரூபாவையும் இன்று (09) கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தனர். நாடு முகம்கொடுத்துள்ள கடினமான சந்தர்ப்பத்தில் பிரஜைகள் என்ற வகையில் அதற்கு பங்களிக்க கிடைத்தமை ஒரு மனிதாபிமான கடமை என அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்தியாவசிய உணவு வர்த்தக பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் அன்பளிப்புச் செய்த 25 மில்லியன் ரூபாவை அமைச்சர் சமல் ராஜபக்ஷவும், இலங்கை கிரிக்கட் நிறுவனம் அன்பளிப்பு செய்த 25 மில்லியன் ரூபாவை அமைச்சர் டலஸ் அழகப்பெறும, இலங்கை கிரிக்கட் சங்கத்தின தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தனர்.

பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி, விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் பணிக்குழாமினர் அன்பளிப்புச் செய்த 7 மில்லியன் ரூபாவை அமைச்சர் ரமேஷ் பதிரண ஜனாதிபதியிடம் கையளித்தார்.

எயார்போட் எண்ட் ஏவியேஷன் சர்விசஸ் (ஸ்ரீலங்கா) லிமிடற் நிறுவனம் 10 மில்லியன் ரூபா, அரச அதிகாரிகளின் நலன் பேணல் சங்கம் மற்றும் இரிகேஷன் இன்ஜினியரின் டிப்லொமெட்ஸ் எசோசியேஷன் நிறுவனம் என்பன தலா ஒரு மில்லியன் ரூபா, களுத்துறை பௌத்த நம்பிக்கை சபை 10 மில்லியன் ரூபா, மனோ சேகரம் 5 மில்லியன் ரூபா, பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் 2.5 மில்லியன் ரூபா, இலங்கை குடிவரவு, குடியகழ்வு அதிகாரிகளின் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம், அரச நிதி திணைக்களம் ஒரு லட்சத்து 25000 மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சபை 1.5 மில்லியன் ரூபா அன்பளிப்புகள் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ. எகொடவெலே அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்று பிற்பகலாகும் போது கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 585 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…