இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஓய்வு பெற்ற திரு. ஜகத் பி.விஜேவீர அவர்கள் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில், இன்று (17) அவர் தனது கடமைகளை பொல்ஹேன்கொடையில் உள்ள வெகுஜன ஊடக அமைச்சில் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் திரு. S.R.W.M.R.P. சத்குமார - அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்), திரு. H. ஹேவகே - அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி), அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. நாலக்க கலுவெவ ஆகியோர் பங்கேற்றனர்.

கடமைகளை பொறுப்பேற்றபின்னர் அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த செயலாளர் அவர்கள்,

"ஊடகங்கள் அரசாங்கத்திற்கு எக்காளமாக இருக்கக்கூடாது, மாறாக பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும். ஊடக கலாசாரமானாது, மக்களின் நல்வாழ்வை உறுதிசெய்வதாக, நாட்டின் பொருளாதாரம், கல்வி, சகவாழ்வு மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

திரு. ஜகத் பி.விஜேவீர அவர்கள் களணி பல்கலைக்கழகத்தில் நுண்கலை தொடர்பில் முதலாவது பட்டத்திணை பெற்றவரும், பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச கல்வி தொடர்பில் முதுகலை பட்டத்தை பெற்றவருமாவார்.

இலங்கை நிர்வாக சேவையில் அதிகாரியாக நியமனம் பெற்று தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய திரு.ஜகத் பி.விஜேவீர அவர்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலான பொது நிர்வாகத் துறையில் அனுபவம் பெற்றவர். இவர், தனது தொழில் வாழ்க்கை முழுவதும் பல்வேறு அமைச்சகங்களிலும் திணைக்களங்களிலும் பல பதவிகளை வகித்துள்ளதுடன் அரச பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். விசேடமாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றி அநுபவம் பெற்ற திரு.ஜகத் அவர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

அரச சேவையில் சிறந்த அநுபவம் பெற்ற இவர், இறுதியாக அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பதவி வகித்துவந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.