இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பகல் போசன விருந்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தபோதே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இதனைத் தெரிவித்தார்.

இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இராப்போசன விருந்துக்கும் ஜனாதிபதி சிறிசேன அவர்களுக்கு விசேட அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் உரையாற்றும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, மாநாட்டில் உரையாற்றிய அவர், பயங்கரவாத செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள அதேநேரம் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஒரு பூகோள ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.