ஒட்டுமொத்த உழைக்கும் மக்களினதும் வெற்றிகளும் உரிமைகளும் பாதுகாக்கப்படத்தக்க ஒரு மே தினம் மலரட்டும் என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (மே 01) மேதினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மே தினச் செய்தி

உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் இன்று தம் கரங்களில் ஏந்தும் சிவப்பு நிறக் கொடி தொழிலாளர்கள் ஒற்றுமையினதும் தொழிலாளர் வெற்றியினதும் நீண்ட வரலாற்றைக் குறித்து நிற்கின்றது. உலகவாழ் உழைக்கும் மக்கள் என்ற ரீதியில் நெற்றி வியர்வை சிந்தி பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி மே முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. தொழிற்தளங்களில் பண்ணைகளில் அல்லது வேறெந்த இட த்திலும் வியர்வை சிந்தி தமது உழைப்பினை வழங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடும் பெருமூச்சு மற்றும் துயரம் ஆகியன மே தினத்தின் உயிர்மூச்சாகக் கருதப்படுகிறது.

தொழிலாளர்களின் ஊழியம் எனும் சிறிய பற்களைக் கொண்ட சில்லுகளின் கூட்டுச் செயற்பாட்டினூடாகவே உற்பத்தி எனும் பாரிய இயந்திரம் தொழிற்படுகிறது. உலகம் முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு கட்டத்திலும் எவரேனும் ஓர் உழைப்பாளி சிந்தும் வியர்வை மற்றும் கண்ணீர் ஆகியன அடையாளமாக அமைகின்றது.

மே தினத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக உலகம் இவ் வியர்வைக்கும் கண்ணீருக்குமே தனது கௌரவத்தை தெரிவிக்கின்றது. மே தினத்தன்று வரிசைப்படுத்தப்படும் ஒவ்வொரு கொடியும் இரத்தத்தினால் உயிர்ப்பிக்கப்படும் ஆச்சரியம் நிறைந்த வியர்வை மற்றும் கண்ணீருக்கு நன்றி தெரிவிப்பதற்கே மேலுயர்த்தப்படுகிறது.

1956ல் நாம் வென்றெடுத்த மக்கள் வெற்றியின் பின்னர் எமது உழைக்கும் மக்களின் தொழில்சார் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய வினைத்திறன் மிக்க பாதையில் நாம் இன்று தடம் பதித்துள்ளோம்.

2015ல் நாம் அடைந்த புதிய ஜனநாயக சுதந்திரப் பிரவேசத்தினூடே, புதிய பொருளாதார, அரசியல் யுகத்திற்குள் காலடி எடுத்துவைத்துள்ள தற்போதைய சூழலில், மலர்ந்துள்ள இம் மே தினத்தில் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினரின் அபிலாஷைகளையும் பெற்றுக்கொண்ட வெற்றியினை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிப்பதனை, எமது மே தினத்தின் குறிக்கோளாகக் கொள்வோம்.

ஒட்டுமொத்த உழைக்கும் மக்களினதும் வெற்றிகளும் உரிமைகளும் பாதுகாக்கத்தக்க ஒரு மே தினம் மலரட்டும்!