கண் பிரச்சினைகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் உரிய நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் கண் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்புடன் இருக்கலாம் என சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கண் நோய்கள் தொடர்பில் அண்மையில் சுகாதார அமைச்சினால் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நமது நாட்டிலுள்ள சுமார் 1.7 சதவீதமானோர்கள் பார்வையற்றவர்களாகவுள்ளனர் என 2014/2015 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் 17 சதவீதமானோர் கண் தொடர்பான பல பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ் ஆய்வு அறிக்கையின் படி அனைத்து விதமான பிரச்சினைகளிலும் குளுக்கோமா பிரச்சினையானது சுமார் 1 சதவீதமாகக் காணப்படுகின்றது. கண் விழி விரைப்பு நோயானது ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் வௌிக்காட்டாத போதிலும் காலம் செல்ல செல்ல பாதிக்கப்பட்டவர்களை பார்வையற்றவர்களாக மாற்றுகின்றது. 

இதனால் 40 வயதுக்கு கூடிய அனைவரும் தமது கண்களின் நன்மை கருதி குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என  அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

கண்களை பரிசோதனை செய்வதன் மூலமே குளுக்கோமா  நோய் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும். அதன் பின்னர் நாளாந்தம் எடுத்துக் கொள்ளப்படும் மருத்துவ ஆலோசனைகளின் மூலம் நோய்த்தாக்கத்திலிருந்து விடுபட முடியும். இதைவிடுத்து நோய் தொடர்பில் கவனமற்று இருந்தால் பார்வையை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.