தற்போதைய நிலைமையில் இன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால். நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படலாம் என கூறப்படுகின்ற போதிலும், அதுபற்றி தமக்கு அறிவிக்கப்படவில்லை என மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார். நிர்வாகத்திற்கு இது தொடர்பில் அறிவிக்காததால் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோர் சேவைக்கு சமூகமளிக்காதவர்கள் என கருதப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மின்துண்டிப்பு எந்தவகையிலும் இடம்பெறாது என அவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கை அனர்த்தம் காரணமாக மின்துண்டிப்பு இடம்பெற்றாலும் அதனை சீர்செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அரசாங்கத்திடம் சம்பளம் பெறும் நிறுவனம் என்ற வகையில், எந்த விதத்திலும் நாட்டை இருளில் ஆழ்த்தாமல் இருக்க வேண்டும் என்பதே மொத்த ஊழியர்களினதும் நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இன்று தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்றாலும், ஒருபோதும் மின்துண்டிப்பு இடம்பெறாதென மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார விநியோகத்திற்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்பட மாட்டாதென உறுதி அளிப்பதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டணி உறுதி அளித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.