உணவுப்பொருட்களை வாகளங்களில் எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களையும் இடையூறுகளையும் தடுக்குமாறு  பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
 
விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் உணவுப் பொருட்கள் சிரமங்களின்றிச் சந்தையைச் சென்றடைவதன் மூலமாக, பாவனையாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஒழுங்காகவும் தடைகளின்றி சென்றடைய அடைய வேண்டுமென்பதை உறுதிப்படுத்துவதற்காகவே, பொலிஸ்மா அதிபருக்கு இப்பணிப்புரையை பிரதமர் விடுத்துள்ளார்.

இப்பணிப்புரையைப் பிரதமர் வழங்கும் போது, தற்போது உணவுப்பொருட்களைக் கொண்டு செல்லும் பொறிமுறையில் உள்ள சிரமங்கள், இடையூறுகள் தொடர்பாக கிடைக்கப்பட்ட தகவல்களைக் கருத்திற்கொண்டிருந்தார்.

அதேபோல், கொரோனாவைரஸ் (கொவிட்-19) தொற்றுப்பரவலை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்த பிரதமர், இத்தொற்றானது உலகம் முழுவதும் பேரழிவுமிகுந்த தொற்றாக வேகமாகப் பரவிவரும் நிலையில், சுகாதார அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலமாக, இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுவரும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு உதவி வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரினார்.