இலங்கை கடற்படையின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக சீனக் குடியரசினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட பீ-625 கப்பல் (22) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறை வளாகத்தில் முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் “பராக்கிரமபாகு” எனும் பெயரில் இலங்கை கடற்படையின் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்டது.

புதிய கப்பலின் கட்டளையிடும் அதிகாரி கெப்டன் நலீந்திர ஜயசிங்கவிடம் கப்பலை கையளிப்பதற்கான சான்றுப்பத்திரங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து “பராக்கிரமபாகு” எனும் பெயரில் இலங்கை கடற்படைக் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்ட கப்பலின் பெயர்ப்பலகையையும் உத்தியோகபூர்வ இலட்சினையையும் சர்வ மத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்.

ஜனாதிபதி அவர்கள் இக்கப்பலைப் பார்வையிட்டதோடு, கடற்படைத் தளபதியினால் கப்பலின் செயற்பாடுகள் மற்றும் தயாரிப்பு குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

1994ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் 112 மீற்றர் நீளத்தையும் 12.4 மீற்றர் அகலத்தையும் கொண்டதுடன், அதன் கொள்ளளவு 2,300 தொன்களாகும். 18 அதிகாரிகள் உள்ளிட்ட 110 பேர் இக்கப்பலில் சேவையாற்றுகின்றனர். இக்கப்பல் இலங்கை கடற்படையின் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையின் ஆழ்கடல் பிரதேசத்தில் தேடுதல், மீட்பு நடவடிக்கைகள், கடல் வளங்களை பாதுகாத்தல் மற்றும் கடற்படை செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கப்பல் மற்றும் இயந்திரங்களுக்கு உதவியளிப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றும் முன்னாள் இராணுவ தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை பிரதானிகளும் இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதுவர் செங் சுவான் உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.