சுற்றாடல் பாதுகாப்பு சட்டங்களையும் சுற்றாடல் பாதுகாப்பிற்கான கொள்கை ரீதியிலான தீர்மானங்களையும் உரியவாறு நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுதல் நாட்டைக் கட்டியெழுப்பவும் நாட்டு மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கடமையாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
06ம் திகதி முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின விழாவின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜூன் 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “பேண்தகு வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைதலைக் குறைத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தற்போது உலகம் முகங்கொடுத்துள்ள சுற்றாடல் சவால்களுக்கு மத்தியில் சுற்றாடலை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் சுற்றாடல் பாதுகாப்பிற்கான பல்வேறு சட்டங்கள் தம்மால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அவற்றின் அமுலாக்கம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாதுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பொலித்தின் தடை உள்ளிட்ட சூழல்நேய தீர்மானங்களை நடைமுறை ரீதியில் அமுல்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுதல் எதிர்கால சந்ததியினருக்காக நாம் நிறைவேற்றும் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.
மரங்களை வெட்டும் சென்சோ இயந்திரங்கள் இறக்குமதி செய்வதை வர்த்தமானி அறிக்கை மூலமாக தடை செய்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், புதிய தச்சு வேலைத் தளங்களை பதிவு செய்வதை நிறுத்துவதற்கும் மர ஆலை உரிமையாளர்களை வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இலங்கையின் வன அடர்த்தியை அதிகரிக்கும் அதேவேளை மக்களின் வாழ்க்கைக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு குறைந்தபட்சம் பத்தாண்டு காலமாவது இந்த வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
சூழலியலாளர்கள், பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தமது அறிவையும் அனுபவத்தையும் அதேபோன்று சர்வதேச சுற்றாடல் மாநாடுகளில் தாம் பெற்றுக்கொண்ட அறிவையும் நாட்டிற்காக நடைமுறைப்படுத்துவதற்கு முன்வருமாறு ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.
சர்வதேச சுற்றாடல் தின கொண்டாட்டத்தை அடையாளப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அவர்கள் மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன். வளி மண்டல தரவுகளை அளவிடும் ஊர்தியை ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.
சுற்றாடல் உறுதிமொழியை ஏற்றதன் பின்னர் சர்வதேச சுற்றாடல் தினக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின.
வளி மற்றும் நீர் தர நிர்ணய பிரிவுகள் தொடர்பிலான இணையத்தளத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது திறந்துவைத்தார்.
வாகன புகை வெளியேற்றம் பற்றிய நிதியத்தினால் வழங்கப்படும் புகை அளவீட்டு பிரிவு ஜனாதிபதி அவர்களினால் உத்தியோகபூர்வமாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.
பேண்தகு வன முகாமைத்துவத்திற்காக வளி மாசடைதலைக் கட்டுப்படுத்தல், வழிகாட்டுதல் தொடர்பான கையேடும் “சொபாகெத” சஞ்சிகையும் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
2019 சர்வதேச சுற்றாடல் தினத்திற்கு சமகாலத்தல் ஜனாதிபதி அவர்கள் கைச்சாத்திட்டுள்ள புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வர்த்தமானியை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள 27 ஹெக்டெயர் விஸ்தீரமுள்ள சென்டிக்காடு மணல் மேட்டினை அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசமாக பெயரிட்டு அதனை பாதுகாப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் இன்று வெளியிடப்பட்டது.
அதேபோன்று வனரோபா தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 14 அரச அலுவலகங்களில் நாற்றுமேடைகளை அமைப்பதற்கு 21.3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கான உறுதிமொழிப் பத்திரம் ஜனாதிபதி அவர்களால் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
புனரோதய தேசிய சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.
சூழல்நேய கண்டு பிடிப்பொன்றினை உருவாக்கிய இரத்தினபுரி சுமன மகளிர் கல்லூரியின் மாணவி தருஷி ராஜபக்ஷவை பாராட்டி அவரின் எதிர்கால பணிகளுக்காக 15 இலட்சம் ரூபா நிதியுதவியையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.
இரத்தினபுரி சுமன மகளிர் கல்லூரியின் உயர்தர கலைப் பிரிவில் கல்வி பயிலும் மாணவி தருஷி விதுசிகா ராஜபக்ஷ சிறு வயது முதலே பல கண்டுபிடிப்புக்களை நாட்டுக்கு வழங்கியுள்ளதுடன், லஞ் சீட்டுக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய சூழல்நேய பை ஒன்றையும் அவர் நிர்மாணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள், கல்விமான்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜூன் 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம் திகதி வரையான காலம் தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு அதன்கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மே மாதம் 30ஆம் திகதி சுற்றாடலை துப்பரவு செய்தல் மற்றும் சுற்றாடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தினமாகவும் 31ஆம் திகதி வாயு மாசடைதலையும் அதன் தாக்கங்களையும் குறைப்பதற்கான தினமாகவும் ஜூன் 01 ஆம் திகதி மரநடுகைக்கான தினமாகவும் ஜூன் 02ஆம் திகதி நீர் மற்றும் நீர் மூலங்களை பாதுகாப்பதற்கான தினமாகவும் பெயரிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாடு, ஜூன் 03ஆம் திகதி உயிர் பல்வகைமையை பாதுகாப்பதற்கான தினமாகவும் ஜூன் 04ஆம் திகதி பேண்தகு காணி முகாமைத்துவத்திற்கான தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுகப்பட்டுள்ளன.