சுற்றாடல் வாரமொன்றை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து செயற்திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

24ம் திகதி முற்பகல் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

சுற்றாடல் அதிகார சபையினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.

சுற்றாடல் வழிகாட்டி செயற்திட்டத்தை தாமதமின்றி நிறைவு செய்தல், பாடசாலை மட்டத்திலான சுற்றாடல் வழிகாட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இதனோடு தொடர்புடைய சகல தரப்பினரையும் இணைத்து சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான ஈடுபாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பொலித்தின் தடை, வாகனங்களில் அதிக ஒலியை எழுப்புவதை தடை செய்தல், சுற்றாடல் பொலிஸாரை பலப்படுத்துதல் போன்ற சுற்றாடல் பாதுகாப்பிற்காக அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான தீர்மானங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்பாக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

அத்தோடு கண்டி நகரில் பிரதான சுற்றாடல் பிரச்சினையாக காணப்பட்ட கட்டுகஸ்தோட்டை கொஹாகொட குப்பைமேட்டுடன் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது கேட்டறிந்தார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் ஏ.ஜே.எம்.முஸம்மில், பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.