ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றலில் சர்வ கட்சி மாநாடு இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைவதின் முக்கியத்துவம் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது. நாடு என்ற வகையில் இந்த சந்தர்ப்பத்தில் பயங்ரவாதத்தை வேரறுப்பதற்கும் பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கும் ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குதாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் உறுதியளித்தனர்.
இந்த பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நாட்டு மக்களின் நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காகவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பில் கட்சி தலைவர்களுக்கு தெளிவூட்டிய ஜனாதிபதி அவர்கள், புதிய போக்குகளின் மத்தியில் பாதுகாப்பு பிரிவுகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். அதேபோன்று ஒன்றிணைந்த பாதுகாப்பு செயற்பாட்டு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் அதனூடாக அனைத்து பாதுகாப்பு செயற்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அரசியல் கருத்துக்களையும் நோக்கங்களையும் புறம் தள்ளி பொதுமக்களுக்காக நாட்டில் சமாதானமான சூழலை கட்டமைப்பதற்கு ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த துரதிர்ஸ்டவசமான சம்பவம் தொடர்பிலும் பாதுகாப்பு துறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பிலும் எடுத்துரைத்ததுடன், அந்தக் குறைபாடுகளை திருத்திக்கொண்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர். நாட்டின் பாதுகாப்பு துறையினர் தொடர்பில் நம்பிக்கை வைத்து அவர்களது தலைமையின் கீழ் பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அனைத்து அரசியல் தலைமை தலைவர்களும் பாதுகாப்புத் துறையுடன் சம்பந்தப்பட்ட அனுபவம் வாய்ந்தவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதின் முக்கியத்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பசில் ராஜபக்ஷவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஜாதிக்க ஹெல உருமய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுர்தீன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி தீகாம்பரம், மலைநாட்டு மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஸ்ணன், ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீ லங்கா கொம்னியுஸ்ட் கட்சியின் தலைவர் டிவ்.குணசேகர, லங்கா சமசமாஜ கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, தேசிய ஒருமைப்பாடு கட்சியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.