தற்காலத்தில் தேசத்தின் சிறிய, பெரிய கிராமங்களின் ஊடாக பல பகுதிகளிலும் பரவிக்கொண்டிருக்கும் போதைப்பொருள் பேரழிவானது இலங்கை பிள்ளைகளின் எதிர்கால பாதுகாப்பை இருள்மயப்படுத்தியும் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வை நெருக்கடிக்குட்படுத்தியும் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

எதிர்கால சந்ததியினருக்காக போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டை உரிமையாக்குவதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அரப்பணிப்பதாக முழு தேசமும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுக்கும் “சித்திரை மாத உறுதிமொழி” நிகழ்வு இன்று 03 ஆம் திகதி முற்பகல் இடம்பெற்றது.
இதன் அங்குரார்ப்பண வைபவம் சமய தலைவர்களின் ஆசீர்வாதத்துடன், ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று (03) முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், மற்றும் அரச அதிகாரிகள், முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்புத்துறை பிரதானிகளுடன் இன, மத பேதமின்றி பெருமளவான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எதிர்கால சந்ததியினருக்காக போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டினை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக தான் போதைப்பொருள் பாவனையை தவிர்த்துக்கொள்வேன் என்றும் ஏற்கனவே அதற்கு பலியாகியுள்ள மற்றும் பலியாகாத தனது உறவினர்களையும், நண்பர்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் போதையிலிருந்து மீட்டுக்கொள்வதற்காக இத்தால் தன்னிடம் ஒப்படைக்கப்படும் மகத்தான கூட்டுப்பொறுப்பை உயர்ந்தபட்ச அர்ப்பணிப்போடும் நேர்மையோடும் நிறைவேற்றுவேன் என்றும் அனைவரும் திடசங்கற்பம்பூண்டு சத்தியப்பிரமாணம் செய்தனர்.
இந்த நிகழ்வு இலத்திரனியல் ஊடகங்களின் வாயிலாக நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டதோடு, அதனுடன் இணைந்ததாக தத்தமது நிறுவனங்களிலிருந்து அரச சேவையாளர்கள், பொதுமக்கள், பாடசாலை பிள்ளைகள் ஆகிய அனைவரும் இந்த சித்திரை மாத உறுதிமொழியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் அழிவிலிருந்து நாட்டை விடுதலை செய்து, சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக குடும்ப கட்டமைப்பிலிருந்து சமூக கட்டமைப்பு வரை விரிவானதொரு கருத்து மாற்றத்துடனும் நேரடி பங்களிப்புடனும் இந்த பேரழிவை ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது ஜனாதிபதி அவர்களின் எண்ணமாகும்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வாகவே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் “சித்திரை மாத உறுதிமொழி” நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதனுடன் போதைக்கு எதிரான நிகழ்ச்சித்திட்டத்தை அனைத்து பிரிவுகளினதும் ஒத்துழைப்புடன் பலமாக முன்னெடுக்க வேண்டும் என்பது ஜனாதிபதி அவர்களின் நோக்கமாகும்.