இன்று (08) அதிகாலை சீஷெல்ஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி அவர்களை அந்நாட்டின் சிரேஷ்ட அமைச்சரான மெக்சுசி மொன்டன் (Macsuzy Mondon) உள்ளிட்ட பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
சீஷெல்ஸ் நாட்டின் அமைச்சரவை மற்றும் மக்கள் சேவை தொடர்பான இராஜாங்க செயலாளர் முஹம்மட் அபீப் (Mahamed Afif), சீஷெல்ஸ் இராஜதந்திர சேவையின் தலைவரும் சீஷெல்ஸ் நாட்டின் ரஷ்ய தூதுவருமான விளாடிமிர் பெலோஸ் (Vladimir Belous), இலங்கைக்கான சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகர் கொன்ராட் மெடரிக் (Conrad Mederic), சீஷெல்ஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் டிகிரி ஹேரத் குணதிலக ஆகியோரும் ஜனாதிபதி அவர்களை வரவேற்பதற்கு விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
சுற்றுலாத்துறை, மீன்பிடித் தொழிற்துறை மூலம் முறையான அபிவிருத்தியை அடைந்துள்ள சீஷெல்ஸ், ஆபிரிக்க வலயத்தில் அதிக அபிவிருத்தியைக் கொண்ட நாடாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுகாதாரம், கல்வி, சுற்றுலா, மீன்பிடி மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் இருந்துவரும் உறவுகளை மேலும் மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு புதிய நன்மைகளை பெற்றுக்கொள்வது ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி போவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது இரு நாடுகளினதும் அரச தலைவர்களின் முன்னிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.
சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி போ அவர்கள் 2017 பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.