கிழக்குப் பல்கலைக்கழத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
நினைவுப் பலகையை திறந்து வைத்து புதிய பிரயோக விஞ்ஞான பீடக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், புதிய கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரயோக விஞ்ஞான பீட கட்டிடத்திற்கான மொத்த செலவு 410 மில்லியன் ரூபாவாகும். அத்துடன் இன்று நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்திற்கு 784 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் விடுதி வசதிகள் உள்ளிட்ட ஏனைய கட்டிடங்களின் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் வகையில் சகல பல்கலைக்கழகங்களுக்கும் கட்டிட வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டம் 2015ஆம் ஆண்டில் உயர் கல்வியமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது.
இச்செயற்திட்டத்தின் கீழ் சகல பல்கலைக்கழகங்களிலும் 162 கட்டிடங்களை புதிதாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவற்றின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் காணப்படுகின்றன. இந்நிர்மாணப் பணிகளுக்காக அரசாங்கம் 88,964 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், அதில் 86 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த பீடங்களுக்கு 84 விடுதிக் கட்டிடங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றினூடாக 33,600 மாணவர்கள் தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்ளவுள்ளனர். இவற்றுள் 78 விடுதிகளின் நிர்மாணப் பணிகள் தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களுக்கு வளாகப் பொறுப்பாளர் கலாநிதி வீ. கனகசிங்கம் நினைவுப்பரிசில் வழங்கினார்.
எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, தயாசிறி ஜயசேகர, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் மருத்துவ கலாநிதி கருணாரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.