இதன்போது ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதி அவர்களுக்கு சிநேகபூர்வமான வரவேற்பு அளித்தார்.
ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால உறவினை வலுவோடு முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது சுட்டிக்காட்டிய ஈரானின் ஆன்மீகத் தலைவர், இருநாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை போன்றே மக்களுக்கிடையிலும் தொடர்புகளை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
பூகோள ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களைக் கொண்டுள்ள இருநாடுகளும் தமது அபிவிருத்தி வாய்ப்புக்கள் குறித்தும் செயற்பட வேண்டுமெனவும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் தெரிவித்தார். மேலும் இலங்கை தேயிலை மீது தான் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இரு நாட்டு மக்களினதும் எண்ணங்களில் ஒற்றுமைகள் காணப்படுவதை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் மூலமாக தாம் அறிந்துகொண்டதாகவும் ஈரானிய ஆன்மீகத் தலைவர் தெரிவித்தார்.
அதற்கமைய இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தி, சகோதர நாடுகளாக முன்னோக்கி செல்ல காணப்படும் வாய்ப்பினை சுட்டிக்காட்டிய ஈரானிய ஆன்மீகத் தலைவர், நேற்றைய தினம் இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஆன்மீகத் தலைவர் என்ற வகையில் அவர் ஆற்றிவரும் பணிகளை பாராட்டியதுடன், பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகமே இலங்கையில் காணப்படுவதுடன். சமயக் கோட்பாடுகளின் ஊடாகவே சமூகத்தை நல்வழிப்படுத்த முடியுமெனவும் குறிப்பிட்டார்.
ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சியை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு அந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளவும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரானுக்கு அரசமுறை விஜயம் மேற்கொள்வதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கும் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, விருந்தோம்பல் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஈரானிய ஆன்மீகத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.
இதனிடையே ஈரானின் டெஹரான் நகரில் வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி அவர்கள் நேற்று (13) பிற்பகல் சந்தித்தார்.
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், அவர்களுடன் சுமுக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
கல்விமான்கள், தொழிற்துறை நிபுணர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதி அவர்களுக்கு அவர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.