இவ்விடயம் தொடர்பில் மகா சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை தொடர்ந்துவரும் வாரத்தில் பௌத்த சமய கொண்டாட்டங்களை நாடுபூராகவும் கோலாகலமாக மேற்கொள்வதற்கு மகா சங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஏற்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இதனிடையே மே 07 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதுடன், அத்தினத்தில் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
27ம் திகதி பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற, இலங்கை அமரபுர மகாசங்க சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமரபுர மகா நிக்காயவின் சூலகந்தி பிரிவின் மகா நாயக்கர் சாஸ்ரபதி அதி.வண. கந்துனே அஸ்ஸஜி தேரருக்கு நியமனப் பத்திரத்தை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பௌர்ணமி தினத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துதல் தொடர்பாக மகா சங்கத்தினரால் விடுக்கப்பட்டுள்ள நீண்ட கால கோரிக்கையையும் இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், அவ்விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு புதிய நடைமுறை ஒன்றை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் தனியார் வகுப்புக்களை நடத்தும் நிறுவனங்களிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவும் பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்கர் அக்கமகா பண்டித அதி.வண. கொட்டுகொட தம்மாவாச தேரர் உள்ளிட்ட மூன்று நிக்காயாக்களின் மகாசங்கத்தினரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் காமினி ஜயவிக்கிரம பெரேரா, கயந்த கருணாதிலக்க, மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, ருவான் விஜேவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.