இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான நட்புறவை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதுடன், அண்மைக் காலத்தில் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு இதுபோன்றதொரு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1956ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி பாகிஸ்தான் மக்கள் குடியரசாக மாற்றப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 23ஆம் திகதி மக்கள் குடியரசு தினமாக கோலாகலமான முறையில் கொண்டாடப்படுகிறது. இம்முறை இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அமோக வரவேற்பளிப்பதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் மற்றும் பிரதமர் சஹீத்கான் அப்பாஸ் ஆகியோரையும் ஜனாதிபதி அவர்கள் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கல்வி ஆகிய துறைகளில் உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் ஜனாதிபதி அவர்களின் இவ் விஜயத்தின்போது இருநாடுகளுக்கிடையில் கல்வி மற்றும் சுற்றுலா துறையில் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.