இதற்கு தேவையான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதுடன், வரட்சியான காலநிலையில் விவசாய சமூகத்திற்கு கஷ்டங்களின்றி தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இக்குளங்களின் புனரமைப்பு பணிகளை விரைவாக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இன்று (26) முற்பகல் தமன்கடுவை பிரதேச செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்
”எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இது வரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இவ்வருடத்திற்கான அபிவிருத்திதிட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதேநேரம் சிறுநீரக வைத்தியசாலை, பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மும்மொழி பாடசாலை ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இம்மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் ஏற்பாட்டின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்கின்றபோது குறித்த பிரதேசங்களில் உள்ள மக்களின் அபிவிருத்தி தேவைகளை இனங்கண்டு மக்களின் பணம் விரயமாகாத வகையில் அபிவிருத்தி திட்டங்களை தயாரிப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்வதற்காக தயாரிக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் உரிய நியமங்களுக்கேற்ப மக்களின் தேவைக்கு பொருத்தமான வகையில் திட்டமிட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் எதிர்நோக்கும் நீர்ப் பிரச்சினை குறித்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி, நீர்த் தேக்கங்கள் மற்றும் குளங்களில் உள்ள நீர்மட்டம் குறித்து விவசாய அமைப்புகளின் ஊடாக விவசாய சமூகத்திற்கு தொடர்ச்சியாக அறிவூட்டி அதற்கேற்ப தமது விவசாய திட்டங்களை தயாரிப்பது குறித்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இதே நேரம் வெலிக்கந்த மற்றும் திம்புலாகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் 636 பயனாளிகளுக்கு வாழ்வாதார அபிவிருத்திக்காக 29 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சித்திட்டமும் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் வெலிக்கந்த பிரதேச செயலாளர் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
2017ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், 2018ஆம் ஆண்டிற்கான ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளுகளின் கீழ் 295 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்.ஏ.சமந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, வெலிக்கந்த பிரதேச செயலாளர் ஹர்ஷ சி பண்டார ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பி வருகின்றபோது வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நன்மைகளுக்கு ஏற்ப வெலிக்கந்த நகரில் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரது கடைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அவரது விபரங்களை கேட்டறிந்ததுடன், அவருடன் சுமுகமாக கலந்துரையாடினார்.