உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த சிங்கப்பூர் பிரதமரையும் அவரது பாரியாரையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் அவரது பாரியார் ஜயந்தி சிறிசேனவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், இராணுவ மரியாதை அணிவகுப்பு வேட்டுக்கள் சகிதம் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

அரச தலைவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

இருநாடுகளுக்கிடையிலும் பொருளாதார, வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேம்படுத்தல் தொடர்பாக அரச தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

மேலும் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக தொடர்புகளை துரிதமாக முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையும் அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை சார்பில் அபிவிருத்தி உபாயமார்க்கங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரமவும், சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.


இதன்போது கருத்துத் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் இரு நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த புதிய உடன்படிக்கையினூடாக வர்த்தக முதலீட்டுத்துறைகளில் இரு நாடுகளுக்கும் அனுகூலங்களை பெறக்கூடிய புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

தொழிற்பயிற்சி, புதிய தொழில் வாய்ப்புக்கள், உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி போன்ற துறைகளில் சிங்கப்பூரினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக முயற்சிகளுக்கான முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதுடன், இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் முதலீட்டாளர்களை மேலும் ஊக்கப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு சிங்கப்பூர் பிரதமர் எதிர்வரும் வர்த்தக சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படுமென்று பதிலளித்தார்.

ஒரேவிதமான உபாய மார்க்கங்கள் பலவற்றைக் கொண்டுள்ள நாடுகள் என்றவகையில் அத்தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் சிங்கப்பூர் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சுகாதாரம், சுற்றுலா, இணையத்தினூடான வியாபார நடவடிக்கைகள், மின்சக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு முன்னுரிமையளித்து இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பினை விருத்தி செய்தல் தொடர்பாகவும் அரச தலைவர்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடினர்.

இலங்கையில் சுற்றுலாத்துறையில் காணப்படும் புதிய வாய்ப்புகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியினால்; சிங்கப்பூர் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் அனுகூலமான பதில் கிடைத்தது.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தினை செயற்படுத்த சிங்கப்பூர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பினை பாராட்டிய ஜனாதிபதி, அவற்றை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பினையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரச சேவையாளர்களுக்கு பயிற்சிகளை வழங்க சிங்கப்பூர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளை ஜனாதிபதி பாராட்டியதுடன், அரச சேவையாளர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் இலங்கையிலுள்ள கற்கை நிலையங்களின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்ததுடன், அது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.

தொழிற்பயிற்சி துறையில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், கல்வி மறுசீரமைப்பு மற்றும் மனிதவள அபிவிருத்திக்கான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியினால்; செய்யப்பட்ட கோரிக்கைக்கு சிங்கப்பூர் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.

அதிகளவிலான இலங்கையர்கள் தற்போது சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் சேவையாற்றுவதுடன் மிக மகிழ்ச்சியோடும் அவர்கள் வாழ்ந்துவருவதாக தெரிவித்த ஜனாதிபதி, சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு மேலும் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியுமாறும் சிங்கப்பூர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

தீவு நாடு என்றவகையில் போதைப்பொருள் கடத்தலை இல்லாதொழிக்க ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டியமைக் குறித்தும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச அமைப்புக்களில் மிக நெருக்கமாக செயற்பட்டுவரும் சிங்கப்பூரும் இலங்கையும், ஏசியன் (ASEAN ) அமைப்புடன் சிறந்த தொடர்புகளை பேணுவதாக தெரிவித்த ஜனாதிபதி, ஏசியன் அமைப்புடன் மேலும் நெருக்கமாக செயற்பட இலங்கை எதிர்பார்ப்பதுடன், அதன்பொருட்டு இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் கோரிக்கையையும் முன்வைத்தார்.

2015 ஆம் ஆண்டில் தான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நல்லாட்சியின் குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் பொருட்டு நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்தமை தொடர்பாக சிங்கப்பூர் பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இருநாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் அத்தொடர்புகளை பல்வேறு துறைகளிலும் விரிவுபடுத்துவதற்கும் இந்த விஜயம் வாய்ப்பாக அமையுமென்று தெரிவித்தார்.

மேலும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லூங்கின்; தந்தையாரான முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததையும் பல சந்தர்ப்பங்களில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தமையையும் நினைவுகூர்ந்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, திலக் மாரப்பன, தலதா அத்துகோரல, சாகல ரத்னாயக்க, மஹிந்த அமரவீர, சந்திம வீரக்கொடி, மலிக் சமரவிக்கிரம, ரஞ்சித் மத்துமபண்டார, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட குழுவினரும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், வர்த்தக மற்றும் கைத்தொழிற்துறை அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மற்றும் இலங்கைக்கான சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் S. Chandra Das மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான Liang Eng Hwa, Saktiandi Bin Supaat உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

இதன்பின்னர் சிங்கப்பூர் பிரதமருக்கும் அவரது பாரியாருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் மற்றும் அவரது பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விருந்துபசாரமும் கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.