பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது பல்கலைக்கழக உபவேந்தர்களின் பொறுப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
இலங்கை பல்கலைக்கழங்களை சர்வதேச மட்டத்தில் பிரபலப்படுத்த மூலோபாய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.
பல்கலைக்கழங்களில் காணப்படும் நெருக்கடிகள் பற்றியும் எதிர்கால உயர்கல்வி திட்டமிடல் தொடர்பாகவும் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டதுடன் பல்கலைக்கழங்களில் கட்டங்களை நிர்மாணிப்பதற்கு முக்கியத்துவம் வழங்குவதை விட உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் உபவேந்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பகிடிவதைகளை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். தேவை ஏற்படுமாயின் புதிய ஊழியர்களை இணைத்தாவது பகிடிவதைக்கு உள்ளாகாத வகையில் மாணவர்களுக்கு கல்வி கற்கக்கூடிய சூழலை உருவாக்குமாறு பிரதமர் அங்கு கேட்டுக் கொண்டார்.

பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களை பகிஷ்கரிப்பதை கைவிட்டு கல்வி மீது கவனம் செலுத்துவது அவசியமாகும். பட்டப் பின்படிப்பு, ஆய்வு நடவடிக்கைகள் என்பனவற்றை விஸ்தரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூட்டு கற்கை பாடநெறிகளை நடைமுறைப்படுத்துமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக உபவேந்தர்கள், திறைசேரியின் அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.