இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுடன் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போதே அவுஸ்திரேலிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு அவுஸ்திரேலிய பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் போதைப்பொருளுக்கெதிரான ஆற்றல்களை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு அவுஸ்திரேலியா உதவும் என அவுஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்தார். இலங்கையில் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு அவுஸ்திரேலியா உதவுமெனத் தெரிவித்த அவர், அக்கல்லூரியின் நிர்வாக மற்றும் கலைத்திட்ட நிபுணத்துவத்தை வழங்குவதற்கும் தெரிவுசெய்யப்பட்ட பாடநெறி தகவல்களை வழங்குவதற்காக சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவரை இரண்டு வருடங்களுக்கு அவுஸ்திரேலியா அனுப்பிவைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், சர்வதேச மன்றங்களிலும் அவுஸ்திரேலியா வழங்கிவரும் தொடர்ச்சியான உதவிகளுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அவுஸ்திரேலிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள் இலங்கைக்கு பாரிய பிரச்சினையாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை ஒரு தீவு நாடாக இருக்கின்ற காரணத்தினால் பல்வேறு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமது கடத்தல் நடவடிக்கைகளுக்கு இந்த நாட்டை மத்திய நிலையமாக பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கடற்பாதுகாப்பு கண்காணிப்பு படகுகளை வழங்கி இலங்கையின் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவியமைக்காக ஜனாதிபதி அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூன்று அதிவேகப் படகுகளை அவுஸ்திரேலியா அன்பளிப்பாக வழங்கும் எனத் தெரிவித்த அவுஸ்திரேலியப் பிரதமர், இந்த அதிவேக படகுகள் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மிகவும் பயனுள்ளவை என்றும் தெரிவித்தார்.
புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி அவர்கள், அவுஸ்திரேலியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். இவ்வுடன்படிக்கை இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டுறவை மேலும் மேம்படுத்த உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தம் கைச்சாத்திடும் நிகழ்வின் போது அவுஸ்திரேலிய பிரதமர் டேர்ன் புல் மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இலங்கைக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டதையிட்டு ஜனாதிபதி அவர்கள் அவுஸ்திரேலிய பிரதமர் டேர்ன் புல்லுக்கு நன்றி தெரிவித்தார்.
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.