இலங்கை பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 03ம் திகதி பிற்பகல் இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் உதவியை அதற்காக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
தனியொருவரிடமுள்ள அதிகாரம் கூட்டாண்மை முறைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால் அந்த நியாய தர்மங்களுக்குள் செயற்பட்டு நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சட்டவாக்கம், நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதித்துறை பிரச்சினைகள் எழாத வண்ணம் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் இறைமையை பலப்படுத்தும் தலைமை நிறுவனம் என்ற வகையில் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டவாக்க அதிகாரத்தை ஒருபோதும் எவரும் சவாலுக்குட்படுத்த முடியாத வகையில் பேண வேண்டியதன் அவசியத்தையும், நிறைவேற்றதிகார முறைமைக்குள் ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை பலப்படுத்தி சட்ட ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் போது நீதித் துறை சுயாதீனமாகவும் பக்கசார்பின்றியும் செயற்படுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
70 வருட பாராளுமன்ற வரலாற்றில் சிறப்பான பணியில் ஈடுபட்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் ஜனாதிபதி கௌரவத்துடன் நினைவுகூர்ந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சபையில் உரையாற்றினர். சார்க் நாடுகளின் பாராளுமன்ற சபா நாயகர்கள், பிரதி சபா நாயகர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களும் சபையில் பிரசன்னமாகியிருந்தார்கள்.