எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுரக்க்ஷா காப்புறுதி திட்டத்தினை மாணவர்களிடம் கையளிக்கும் தேசிய நிகழ்வு இன்று (02) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றவேளை அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை மாணவர் சமூகத்தின் நன்மைக்காக கல்வி அமைச்சினால் இலவசமாக வழங்கப்படும் மருத்துவ மற்றும் திடீர் விபத்துக் காப்புறுதி திட்டமான சுரக்க்ஷா காப்புறுதி திட்டமானது, ”தேசத்தின் எதிர்கால தலைமுறையை என்றும் காப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமைவாக கடந்த இரண்டரை வருட காலத்திற்குள் அரசாங்கத்தினால் சிறுவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
11,242 பாடசாலைகளை சேர்ந்த 45 இலட்சம் மாணவர்களை 24 மணி நேரமும் உள்ளடக்கும் வகையில் இந்த காப்புறுதி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பல வரப்பிரசாதங்களை வழங்க கல்வி அமைச்சும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனமும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
மாணவர்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குதல், தனது குடும்பத்தினதும் சமூகத்தினதும் சுகாதாரத்தை மேம்படுத்த தன்னாற்றல் உடையவர்களாக மாணவர்களை வலுப்படுத்தல் மற்றும் கல்விசார்ந்த வாய்ப்புக்களில் உச்ச பயனைப் பெறத் திட்டமிடல் என்பன இதன் நோக்கமாகும்.
காப்புறுதி திட்டம் வழங்குவதை ஆரம்பித்துவைக்கும் வகையில் சில பிக்கு மாணவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் காப்புறுதி அட்டை வழங்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் அகில விராஜ் காரியவசம், கபிர் ஹாசிம், வஜிர அபேவர்தன, ரவுப் ஹக்கீம், தயா கமகே, சரத் பொன்சேக்கா, இராஜாங்க அமைச்சர்கள் பீ.இராதாகிருஷ்ணன், ருவான் விஜேவர்தன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகளும் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.