”பத்திட பனஹய் தர்மசேன பத்திராஜ நிர்மாணவலோக்கனய” எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை சினிமாவின் பொற்காலமான 70 தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க படைப்புக்களை வழங்கிய திரைப்பட இயக்குனராகவும் ஊடக கற்கை தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளருமான தர்மசேன பத்திராஜ அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டத்தை பெற்றவராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நாடகக்கலை தொடர்பான டிப்ளோமாவை பெற்றவர். அவுஸ்திரேலிய மொனாஸ் பல்கலைக்கழகத்தில் திரைப்படத் துறை கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
ருஹூணு பல்கலைக்கழகம், ஸ்ரீபாலி வளாகம், கொழும்பு பல்கலைக்கழகம் போன்றவற்றின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றிய அவர், 1974 இல் “அஹஸ்கவ்வ“ திரைப்படத்தை இயக்கி திரைப்படத்துறையில் நுழைந்தார்.
“எயா தென் லொக்கு லமயெக்“ பொன்மணி, பம்பரு அவித், பார திகே, சோல்தாது உன்னஹே, வாசுலீ, மதுயம் தவச, சுவரூப சகா சத்காரங் ஆகிய உன்னத திரைபடங்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய அவர், “அந்துரென் எலியட்ட, வெரல, தல ரல பெல, புனராவர்த்தன, மாவதக் சொயனு பிணிச“ போன்ற விவரணப் படங்களையும் இயக்கியுள்ளதுடன், தொலைக்காட்சி நாடகங்களையும் இயக்கியுள்ளார்.
உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு ரீதியில் பெரும் புகழ்பெற்ற அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இலங்கை சினிமா துறைக்கு ஆற்றிய பணிக்காக வாழ்நாளில் ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் சுவர்ணசிங்க விருதையும் பெற்றுள்ளார்.
கலாநிதி தர்மசேன பத்திராஜ அவர்கள் சிங்கள திரைப்படத்துறையின் உயர்வுக்காக ஆற்றிய பணியைப் பாராட்டி ஜனாதிபதி அவர்களால் விசேட பரிசொன்று வழங்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய உள்ளிட்ட திரைப்படத்துறையினர், கலைஞர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.