இஸ்லாமிய சமய தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தேசிய நல்லிணக்கத்துக்காக முன்னெடுக்கும் செயற்பாடுகளை பாராட்டியதுடன், தேசிய நல்லிணக்கத்துக்காக ஆசீர்வாதம் செய்தார்கள்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், அனைத்து இனங்களுக்குமிடையில் சமாதானம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பரந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.
முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் பேதங்களை ஏற்படுத்தவதற்கு அரசியல் சதியில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்காகவே 2015 ஜனவரி 08 திகதிய ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களித்ததாகவும் அந்த பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்ற பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.
எனவே அரசியல் சதிகளில் சிக்காது எதிரிகளையும் நண்பர்களையும் இனங்கண்டு செயற்படுமாறு தான் அனைத்து முஸ்லிம்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ரவி கருணாநாயக்கா, ரிஷாட் பதியுதீன், ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.