இரத்மலானை விமான நிலையம் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 54 வருடங்களுக்குப் பின்பே இரத்மலானை விமான நிலையம் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இரத்மலானை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்ட பின்னர் முதலாவது விமானம் இன்று (27) காலை 8.45ற்கு மாலைதீவிலிருந்து இலங்கையை வந்தடைந்தது. 
 
இதற்கமைய முதற்கட்டமாக மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கு இடையில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. இந்தியா மற்றும் மாலைதீவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்தார். 
 
இந்த விமான நிலையம் 22 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.