“ஒருமித்து சிந்திப்போம், ஒருமித்து எழுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் 71ஆவது தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்ட “எகடசிடிமு” (ஒன்றுபடுவோம்) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண விழா மற்றும் கலாசார நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 12ம் திகதி பிற்பகல் கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு முன்னால் கோலாகலமாக இடம்பெற்றது.

தற்போது ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கி செல்வதற்கு அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றாக செயற்பட வேண்டும் என்ற நம்பிக்கையோடு நாட்டுக்காக ஒன்றுபடுவோம் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் சகல அரசியல் சக்திகளையும் ஒன்று திரட்டி நாட்டின் முன்னேற்றத்திற்காக செயற்படுதல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.
ஜனாதிபதி செயலகத்தின் விசேட கருத்திட்டப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மிகச் சிறப்பான முறையில் கலாசார நிகழ்வுகளுடன் இந்த அங்குரார்ப்பண விழா ஆரம்பமானதுடன், இலங்கை இராணுவத்தினர் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் கலை நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.
ஒன்றுபட்டு மேற்கொள்ளவுள்ள இந்த பயணத்தில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக ஒரே சிந்தனையோடு ஒன்றிணைவோம் என்ற “எகடசிடிமு” (ஒன்றுபடுவோம்) என்ற உறுதிப்பத்திரமும் இதன்போது நாட்டுக்கு கீர்த்தியை பெற்றுக்கொடுத்த பிரபல கார் ஓட்ட வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
“எகடசிடிமு” (ஒன்றுபடுவோம்) நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான தொழிநுட்ப உபகரணங்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அதிதிகளும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, வான் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகள் உள்ளோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.