போதைப்பொருட்களுக்கு எதிராக முழு நாடும் உறுதிமொழி வழங்கும் “சித்திரை உறுதிமொழி” ஏப்ரல் 03ஆம் திகதி

இதனை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுக்கு கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு
இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகள் ஏப்ரல் முதலாம் திகதி கட்டுநாயக்கவில்
போதைப்பொருட்களை கண்டறிவதற்காக பயன்படுத்தும் நவீன தொழிநுட்ப உபகரணங்கள் விரைவில் இலங்கையில்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்துவதற்கும் நாட்டின் சிறுவர்களின் எதிர்காலத்திற்காகவும் போதைப்பொருள் பாவனையிலிருந்து விலகியிருப்பதற்கு அனைத்து பிரஜைகளும் தமது மனச்சாட்சியின்படி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இதனை நினைவுபடுத்தி போதைப்பொருள் பாவனையிலிருந்து விலகியிருப்பதாக முழுநாடும் ஒன்றாக மேற்கொள்ளும் உறுதிமொழி வழங்கும் நிகழ்வு ஏப்ரல் 03ஆம் திகதி முற்பகல் 08.00 மணிக்கு “சித்திரை உறுதிமொழி” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலைக்கூட்டத்தின்போது அனைத்து பாடசாலை மாணவர்களையும் இதில் இணைத்துக்கொள்ள உள்ளதுடன், பல்கலைக்கழக மாணவர்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் இதற்காக திறந்த அழைப்பொன்றை விடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஏப்ரல் 03ஆம் திகதி காலை 08.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு வருகைதந்து அந்த உறுதிமொழி வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
06ம் திகதி முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இதுவரையில் கைப்பற்றப்பட்டுள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் ஏப்ரல் முதலாம் திகதி நீதிபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் கட்டுநாயக்கவில் வைத்து அழிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இதேநேரம் சட்டவிரோத போதைப்பொருட்களை கண்டறிவதற்காக பயன்படுத்தும் நவீன தொழிநுட்ப உபகரணங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்காக தற்போது கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில மாதங்களில் அவ் உபகரணங்களை நாட்டுக்கு கொண்டு வர முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், அத்தீர்மானம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எந்தவொருவரும் போதைப்பொருட்களினால் நாட்டுக்கு ஏற்படும் அழிவை தவிர்ப்பதற்கு உதவுவதில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், யார் எதிர்த்தபோதும் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக அந்த பொறுப்பை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டார்.