அண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையாருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா அம்மையாருக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி அவர்கள், பிறந்துள்ள புத்தாண்டில் அவரது சகல செயற்பாடுகளும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா அம்மையார் பிரதிநிதித்துவம் செய்யும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதனூடாக பங்களாதேஷ் மக்கள் ஷேக் ஹசீனா அம்மையார் மீதும் அவரது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடைமுறைக்கு சாத்தியமான, வெற்றிகரமான கொள்கைகள் தொடர்பில் கொண்டுள்ள நம்பிக்கை மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளதென ஜனாதிபதி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையேயான நீண்டகால தொடர்புகள், பொதுவான அபிலாஷைகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளதுடன், அத்தொடர்புகள் பொருளாதார, அரசியல், பாதுகாப்பு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளின் ஊடாக தற்போது விரிவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்குிடையே காணப்படும் இந்த உறுதியான தொடர்புகளும் நட்புறவும் எதிர்காலத்தில் மென்மேலும் மேம்படுத்தப்படும் என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.